

ராஜ ரவிவர்மாவின் யசோதா மற்றும் கிருஷ்ணா இருக்கும் ஓவியம் ரூ.167 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார், சைரஸ் எஸ் பூனாவாலா. முன்னோடி கலைஞரான ராஜா ரவி வர்மாவின் 'யசோதா மற்றும் கிருஷ்ணா' என்ற எண்ணெய் ஓவியம் (Oil Painting), ஏலத்தில் 167.2 கோடி ரூபாய்க்கு (சுமார் 18 மில்லியன் டாலர்) விற்கப்பட்டு, இந்தியக் கலைக்கு ஒரு புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளது.
கடுமையான ஏலப் போட்டிக்குப் பிறகு, இந்த தலைசிறந்த படைப்பானது ரூ. 167.2 கோடிக்கு விற்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விற்பனையானது, கடந்த ஆண்டு ரூ. 118 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்ட எம்.எஃப். ஹுசைனின் 'பெயரிடப்படாதது (கிராம யாத்ரா)' ஓவியம் வைத்திருந்த முந்தைய சாதனையை எளிதாக முறியடித்துள்ளது. ரவிவர்மாவின் ஓவியத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்ட பிறகு, அந்த ஓவியம் குறித்துப் பேசிய பூனாவாலா, “இந்தத் தேசியப் பொக்கிஷம், பொதுமக்கள் பார்வைக்கு அவ்வப்போது கிடைக்கச் செய்யப்பட வேண்டும், இதற்கு வழிவகை செய்வதே எனது முயற்சியாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
1848-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உயர்குடி குடும்பத்தில் பிறந்தவர்தான் ரவி வர்மா, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஐரோப்பிய கலை நுட்பங்களை இந்தியக் கருப்பொருள்களுடன் கலந்து, கலாச்சாரங்களைக் கடந்து எதிரொலித்த ஒரு தனித்துவமான காட்சி மொழியை உருவாக்கியதற்காக இவர் புகழ் பரவியது. சிறுவயதில் இருந்தே ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்ட ரவிவர்மாவிற்கு அவரது மாமா ராஜா ராஜா வர்மா அதற்கு உதவினார். ரவி வர்மாவிற்கு எண்ணெய் ஓவியத்தின் மீது இருந்த அலாதி பிரியத்தின் காரணமாக, அதை கற்றுக்கொள்ள நினைத்தார். ஆனால், அவருக்கு அந்த ஓவியத்தை கற்றுக்கொடுக்க அந்த ஓவியம் நன்கு தெரிந்த யாரும் முன்வரவில்லை. உருவப்படங்களை வரைந்துகொண்டிருந்த ரவி வர்மா பின்னாளில் இதிகாச புராணங்களை குறித்த ஓவியங்களை வரைய தொடங்கினர்.
வர்மாவின் செல்வாக்கு உயர்குடி வட்டங்களைத் தாண்டியும் பரவியது. 1894ல், அவர் ஒரு கல் அச்சு இயந்திரத்தை நிறுவினார், அது அவரது கலைப்படைப்புகளை மலிவு விலையில் அச்சுப் பிரதிகளாக மீண்டும் உருவாக்க அனுமதித்தது. இந்தப் புதுமையான கண்டுபிடிப்பு, இந்து தெய்வங்களின் சித்தரிப்புகளை சாதாரண வீடுகளுக்குள் கொண்டு வந்தது. இன்றும் கூட, அவரது சித்தரிப்புகள் பல மக்கள் இந்தியக் கடவுள்களையும் புராண உருவங்களையும் எவ்வாறு கற்பனை செய்கிறார்கள் என்பதை வரையறுத்து வருகின்றன.
வர்மாவின் கலைப்பயணத்தின் உச்சக்கட்டமாகக் கருதப்படும் 1890களில் வரையப்பட்ட 'யசோதை மற்றும் கிருஷ்ணா' ஓவியம், குழந்தை கிருஷ்ணனுக்கும் அவனது வளர்ப்புத் தாயான யசோதைக்கும் இடையேயான தாய் பாசத்தின் ஒரு நெருக்கமான தருணத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த ஓவியம் அதன் உணர்ச்சி ஆழம், நுட்பமான அமைப்பு, மற்றும் ஒளி மற்றும் நுணுக்கங்களின் திறமையான பயன்பாடு ஆகியவற்றால் தனித்து நிற்கிறது. ஏலத்திற்கு முன்பு, இந்த கலைப்படைப்பின் மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ. 80 கோடி முதல் ரூ. 120 கோடி வரை இருந்தது. இருப்பினும், இறுதி விற்பனை விலை எதிர்பார்ப்புகளை வெகுவாக மிஞ்சி, பெயர் பெற்றது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.