பட்ஜெட் 2026: ‘திவ்யாங் சகாரா’ திட்டம் - இனி செயற்கை கை, கால்கள் தயாரிப்பில் ஏஐ (AI) மயம்!

கருவிகள் முன்பை விட அதிகத் திறன் கொண்டதாகவும், எளிதாகக் கையாளக்கூடியதாகவும் மாறும்...
பட்ஜெட் 2026: ‘திவ்யாங் சகாரா’ திட்டம் - இனி செயற்கை கை, கால்கள் தயாரிப்பில் ஏஐ (AI) மயம்!
Published on
Updated on
1 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாதாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ்வதை உறுதி செய்யும் வகையில் பல அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயவங்கள் மற்றும் உதவி உபகரணங்களைத் தயாரிக்கும் இந்திய செயற்கை அவயவங்கள் உற்பத்தி கழகத்திற்கு (ALIMCO) கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் உயர்தரமான உபகரணங்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவதுடன், அவற்றில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்தி நவீனமயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'திவ்யாங் சகாரா யோஜனா' (Divyang Sahara Yojana) என்ற புதிய திட்டமானது, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்தரமான உதவி உபகரணங்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும். இதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் (R&D) அதிக முதலீடுகளைச் செய்ய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகள் முன்பை விட அதிகத் திறன் கொண்டதாகவும், எளிதாகக் கையாளக்கூடியதாகவும் மாறும்.

மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக 'திவ்யாங்ஜன் கௌஷல் யோஜனா' (Divyangjan Kaushal Yojana) என்ற திறன் மேம்பாட்டுத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாற்றுத்திறனாளி குழுவின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப, தொழில்துறைக்குத் தேவையான பயிற்சிகள் தனிப்பயனாக்கப்பட்டு வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் கௌரவமான வாழ்வாதாரத்தைப் பெறவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் முடியும் என்று நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், 'பிரதமர் திவ்யாஷா கேந்திராக்கள்' (PM Divyasha Kendras) பலப்படுத்தப்படும் என்றும், நவீன சில்லறை விற்பனை பாணியிலான 'உதவி தொழில்நுட்ப அங்காடிகள்' (Assistive Technology Marts) அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்காடிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களுக்குத் தேவையான உபகரணங்களை நேரில் பார்த்து, பரிசோதித்து, பின்னர் வாங்கிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும். இது அவர்களுக்குத் தேவையான நவீனக் கருவிகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும்.

நிதியமைச்சர் தனது உரையில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதற்காக ஏஐ மிஷன் (AI Mission) போன்ற திட்டங்களின் பலன்கள் மாற்றுத்திறனாளிகளைச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக உள்ளடக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையின் கீழ், மாற்றுத்திறனாளிகளின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதே இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com