பங்குச் சந்தை சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி! எஃப் அண்ட் ஓ (F&O) வர்த்தகத்திற்கு நிர்மலா சீதாராமன் வைத்த 'செக்' - இனி லாபம் பார்ப்பது குதிரைக்கொம்பு தான்!

ஒரு சூதாட்டக் களமாக மாற்றாமல் நீண்ட கால முதலீட்டுத் தளமாக மாற்றவும் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது...
பங்குச் சந்தை சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி! எஃப் அண்ட் ஓ (F&O) வர்த்தகத்திற்கு நிர்மலா சீதாராமன் வைத்த 'செக்' - இனி லாபம் பார்ப்பது குதிரைக்கொம்பு தான்!
Published on
Updated on
2 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, பங்குச் சந்தையில் நிலவும் அதீத ஊக வர்த்தகத்தைக் (Speculation) கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளார். இதன்படி, பங்குகள் மற்றும் வழித்தோன்றல் வர்த்தகத்திற்கான (Derivatives) செக்யூரிட்டீஸ் டிரான்ஸாக்ஷன் டேக்ஸ் (STT) எனப்படும் சுங்க வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால் பட்ஜெட் உரையின் போதே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவைச் சந்தித்தன.

புதிய அறிவிப்பின்படி, ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்திற்கான வரி 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆப்ஷன்ஸ் (Options) வர்த்தகத்தில் பிரீமியம் மற்றும் எக்ஸர்சைஸ் (Exercise) ஆகிய இரண்டிற்குமான வரி 0.15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் குதித்துள்ள கோடிக்கணக்கான சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தும். ஒரு சாதாரண டிரேடர் ஒரு நாளைக்குச் செய்யும் பல வர்த்தகங்களுக்கு இனி அவர் பல மடங்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த வரி உயர்வுக்குப் பின்னால் ஒரு மிக முக்கியமான சமூகக் காரணம் உள்ளது. செபி (SEBI) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபடும் 10-ல் 9 தனிநபர் வர்த்தகர்கள் (சுமார் 93%) தங்களின் பணத்தை இழப்பதாகத் தெரிவித்திருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தனிநபர் வர்த்தகர்கள் சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். இந்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும், பங்குச் சந்தையை ஒரு சூதாட்டக் களமாக மாற்றாமல் நீண்ட கால முதலீட்டுத் தளமாக மாற்றவும் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த வரி உயர்வு குறிப்பாக டிஸ்கவுண்ட் புரோக்கரேஜ் (Discount Brokers) நிறுவனங்கள் மற்றும் எக்ஸ்சேஞ்சுகளை (BSE, NSE) கடுமையாகப் பாதிக்கும். வர்த்தகச் செலவு அதிகரிப்பதால் வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது, இது இந்த நிறுவனங்களின் வருவாயைக் குறைக்கும். பட்ஜெட் அறிவிப்பு வெளியான உடனேயே பிஎஸ்இ (BSE) மற்றும் ஏஞ்சல் ஒன் (Angel One) போன்ற நிறுவனங்களின் பங்குகள் 10 முதல் 15 சதவீதம் வரை சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்த பட்ஜெட் சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு ‘கசப்பான மருந்து’ என்று நிபுணர்கள் கருதுகின்றனர். நீங்கள் ஒரு நீண்ட கால முதலீட்டாளராக (Buy and Hold) இருந்தால், உங்களுக்கு இந்த மாற்றத்தால் எவ்விதப் பாதிப்பும் இல்லை; ஏனெனில் டெலிவரி (Delivery) அடிப்படையிலான வர்த்தகத்திற்கு வரி மாற்றப்படவில்லை. ஆனால், நிமிடத்திற்கு நிமிடம் வர்த்தகம் செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு இனி லாபம் என்பது அரசாங்கத்திற்கு வரி செலுத்திய பிறகு மிகக் குறைவாகவே இருக்கும். பங்குச் சந்தையில் இனி நுழையும் முன் இரண்டு முறை யோசிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com