Bachelor இளைஞர்களுக்கு அறை வாடகை பெரிய சிக்கல்... குறைந்த வாடகைக்காக தினமும் 3 மணி நேர பயணம்

இதன் தாக்கத்தை அவர் ஒரு வருட கணக்காகப் பார்த்தபோதுதான் விஷயம் இன்னும் தெளிவாகியுள்ளது.
Bachelor இளைஞர்களுக்கு அறை வாடகை பெரிய சிக்கல்... குறைந்த வாடகைக்காக தினமும் 3 மணி நேர பயணம்
Published on
Updated on
3 min read

படிப்பு முடித்து வேலைக்காக சொந்த ஊரை விட்டு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம் போன்ற பெரிய நகரங்களுக்கு வரும் இளைஞர்களுக்கு முதலில் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று தங்கும் இடம். குறிப்பாக தனியாக வசிக்கும் பேச்சுலர் இளைஞர்களுக்கு அலுவலகத்திற்கு அருகில் நல்ல அறை கிடைப்பது என்பது எளிதான விஷயமாக இருப்பதில்லை. வாடகை அதிகமாக இருப்பது, அறையின் வசதிகள் குறைவாக இருப்பது, உணவு மற்றும் போக்குவரத்து செலவு என பல விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் குறைந்த வாடகையில் அறை கிடைக்கிறது என்பதற்காக அலுவலகத்திலிருந்து வெகு தொலைவில் குடியேறும் நிலையும் பலருக்கு ஏற்படுகிறது.

அப்படித்தான் குருகிராமில் வேலை செய்யும் அயன் சக்ரவர்த்தியும் ஒரு கட்டத்தில் முடிவு செய்துள்ளார். 2023ஆம் ஆண்டு வேலைக்காக குருகிராமுக்கு வந்தபோது, முதலில் தனது அலுவலகத்திற்கு அருகிலேயே தங்கியிருந்தார். அலுவலகத்திற்கு அருகில் இருப்பதால் தினசரி பயண நேரம் குறைவாக இருந்தது. ஆனால், அந்தப் பகுதியில் அறை வாடகை அதிகமாக இருந்ததுடன், அவர் தங்கியிருந்த வீட்டின் நிலையும் திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் குறைந்த வாடகையில் சற்று வசதியான மற்றும் பெரிய வீட்டைத் தேடி அலுவலகத்திலிருந்து தொலைவில் குடியேற முடிவு செய்தார். புதிய இடத்திற்குச் சென்றதும் ஆரம்பத்தில் அவருக்கு அந்த முடிவு சரியானதாகவே தோன்றியது. அலுவலகத்திற்கு அருகில் இருந்த வீட்டுடன் ஒப்பிடும்போது, புதிய வீட்டில் மாத வாடகையாக சுமார் ரூ.20,000 வரை மிச்சமானது. தனியாக சம்பாதித்து செலவுகளை சமாளிக்கும் பேச்சுலர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.20,000 என்பது சாதாரண தொகை அல்ல. அந்தப் பணத்தை சேமிக்கலாம் அல்லது வீட்டிற்கு அனுப்பலாம் என்பதால், தொலைவில் வீடு எடுத்தது நல்ல முடிவாகவே தெரிந்தது.

ஆனால், சில நாட்கள் கழித்துதான் அந்தச் சேமிப்புக்கு பின்னால் இருக்கும் மற்றொரு செலவு அவருக்கு புரியத் தொடங்கியது. புதிய வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் சென்று வர தினமும் சுமார் 60 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்தப் பயணத்திற்காக தினமும் சுமார் மூன்று மணி நேரம் செலவானதாக அயன் தெரிவித்துள்ளார். காலையில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நேரத்திற்காக வீட்டிலிருந்து முன்கூட்டியே புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. மாலை வேலை முடிந்த பிறகும் நீண்ட நேரம் சாலையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பேச்சுலர் வாழ்க்கையில் வேலை நேரம் முடிந்த பிறகு கிடைக்கும் சிறிய நேரம்தான் முக்கியமானது. நண்பர்களை சந்திப்பது, உடற்பயிற்சி செய்வது, வீட்டிற்கு அழைப்பது, ஓய்வெடுப்பது அல்லது தனிப்பட்ட வேலைகளை கவனிப்பது என பல விஷயங்களை அந்த நேரத்தில்தான் செய்ய முடியும். ஆனால், தினமும் மூன்று மணி நேரம் பயணத்தில் போகத் தொடங்கியதால், தனக்காக கிடைக்கும் நேரம் வெகுவாக குறைந்துவிட்டதாக அயன் தெரிவித்துள்ளார்.

இதன் தாக்கத்தை அவர் ஒரு வருட கணக்காகப் பார்த்தபோதுதான் விஷயம் இன்னும் தெளிவாகியுள்ளது. வாரத்திற்கு ஐந்து நாட்கள் அலுவலகத்திற்குச் செல்வதாகவும், ஒரு ஆண்டில் 52 வாரங்கள் இருப்பதாகவும் கணக்கிட்டபோது, தினமும் மூன்று மணி நேர பயணம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு சுமார் 780 மணி நேரத்தை சாலையில் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை நாட்களாக கணக்கிட்டால் சுமார் 32 நாட்கள். அதாவது, ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் முழுவதையும் அலுவலகத்திற்குச் சென்று வருவதற்காகவே செலவிடுகிறார். இதோடு வாகனத்திற்கான செலவும் அதிகரித்தது. முன்பு தினசரி சுமார் ரூ.200 ஆக இருந்த எரிபொருள் செலவு, தொலைவில் குடியேறிய பிறகு ரூ.600 வரை உயர்ந்ததாக அவர் கூறியுள்ளார். இதனால் மாதத்திற்கு சுமார் ரூ.9,000 கூடுதல் செலவு ஏற்பட்டது. வாடகையில் ரூ.20,000 மிச்சமானாலும், எரிபொருள் செலவை கணக்கில் எடுத்த பிறகு உண்மையான சேமிப்பு சுமார் ரூ.11,000 ஆக குறைந்தது. அதிலும் வாகன பராமரிப்பு, சுங்கக் கட்டணம் மற்றும் வாகன நிறுத்தச் செலவு போன்றவை சேர்க்கப்படவில்லை.

இந்த அனுபவத்தை அயன் சமூக வலைதளத்தில் பகிர்ந்தபோது, நகரங்களில் தனியாக வசிக்கும் பல இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை மீண்டும் பேசுபொருளானது. குறிப்பாக பேச்சுலர் அறைகளுக்கு அதிக வாடகை கேட்கப்படும் பகுதிகளில் வேலை செய்பவர்கள், குறைந்த வாடகைக்காக அலுவலகத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சிலர் நண்பர்களுடன் அறையை பகிர்ந்து கொள்வதன் மூலம் வாடகையை குறைக்கிறார்கள். மற்றவர்கள் நகரின் வெளிப்புறப் பகுதிகளில் வீடு தேடுகிறார்கள். ஆனால், வீட்டு வாடகையை மட்டும் வைத்து செலவை கணக்கிடுவது சரியான முடிவாக இருக்காது என்பதையே இந்த அனுபவம் காட்டுகிறது. அறை வாடகை குறைவாக இருந்தாலும், தினசரி பயணத்திற்கான பெட்ரோல் அல்லது போக்குவரத்து செலவு அதிகமாகலாம். அதைவிட முக்கியமாக, தினமும் பல மணி நேரம் பயணத்தில் செலவாகும். வேலைக்குச் சென்று வருவதற்காக செலவிடும் அந்த நேரத்தை மீண்டும் வாழ்க்கையில் பெற முடியாது.

அதனால், பேச்சுலர் இளைஞர்கள் தங்கும் அறையைத் தேர்வு செய்யும்போது மாத வாடகை எவ்வளவு என்பதை மட்டும் பார்க்காமல், அலுவலகத்திற்கான தூரம், தினசரி பயண நேரம், போக்குவரத்து செலவு, உணவு வசதி மற்றும் சுற்றுப்புற சூழல் போன்றவற்றையும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது. குறைந்த வாடகையில் அறை கிடைக்கிறது என்பதற்காக மட்டும் தொலைவில் குடியேறுவது, சில நேரங்களில் வேறு வகையான செலவை உருவாக்கிவிடலாம். குருகிராம் இளைஞரின் அனுபவம் பேச்சுலர் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை நினைவுபடுத்துகிறது. மாதச் செலவில் சில ஆயிரங்களை மிச்சப்படுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால், அந்தச் சேமிப்புக்காக தினமும் பல மணி நேரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த முடிவை மீண்டும் ஒருமுறை கணக்குப் போட்டு பார்க்க வேண்டியது அவசியம். நகர வாழ்க்கையில் வாடகை குறைவாக இருப்பது மட்டுமே நல்ல அறையின் அடையாளம் அல்ல. குறைந்த செலவு, குறைந்த பயண நேரம், வசதியான வாழ்க்கை - இந்த மூன்றுக்கும் இடையே சரியான சமநிலையே முக்கியம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com