"17 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்ததாக நம்பிய லாக்கர்.." திறந்தபோது காணாமல் போன ரூ.50 லட்சம் நகைகள்! அதிர்ச்சி சம்பவம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த லாக்கரை திறந்தபோது அது காலியாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
₹50 lakh jewellery missing
₹50 lakh jewellery missing
Published on
Updated on
3 min read

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வங்கி லாக்கரில் பல ஆண்டுகளாக பாதுகாப்பாக இருப்பதாக நம்பி வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காணாமல் போனதாக பெண் ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் 2003ஆம் ஆண்டு வங்கி லாக்கரில் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த லாக்கரை திறந்தபோது அது காலியாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கான்பூரைச் சேர்ந்த ராஷ்மி அரோரா மற்றும் அவரது கணவர் கடந்த 2003ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ஸ்வரூப் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த State Bank of Travancore கிளையில் சேமிப்புக் கணக்கு தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்களுக்கு 23ஆம் எண் லாக்கர் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவ்வப்போது வங்கிக்குச் சென்று லாக்கரில் இருந்த பொருட்களை சரிபார்த்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் அவரது கணவர் உயிரிழந்த பிறகு குடும்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ராஷ்மி அரோரா, கான்பூரில் இருந்து லக்னோவுக்குச் சென்று மகள் மற்றும் மருமகனுடன் வசிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. வயது மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக வங்கிக்கு அடிக்கடி செல்வது குறைந்தது. இதனால் லாக்கரில் இருந்த நகைகள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, சுமார் நான்கு மாதங்களுக்கு முன், தனது இளைய மகளுடன் ராஷ்மி அரோரா மீண்டும் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்றுள்ளார். அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த State Bank of Travancore தற்போது State Bank of India-வுடன் இணைக்கப்பட்டுவிட்டதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரது பெயரில் லாக்கர் இருப்பது தொடர்பான தகவல் உடனடியாக கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் அவர் தனது பழைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் வங்கியை அணுகியுள்ளார். அப்போது லாக்கர் தொடர்பான கட்டணம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து தொடர்ந்து பிடித்தம் செய்யப்பட்டு வந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணக்கில் இருந்த தொகை குறைந்து, இறுதியில் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 21ஆம் தேதி ராஷ்மி அரோரா தனது கணக்கில் மீண்டும் பணத்தை செலுத்தி கணக்கைச் செயல்படுத்தியதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் லாக்கரின் சாவியை எடுத்துச் செல்லாததால், அதைத் திறந்து பார்க்க முடியவில்லை.

பின்னர் ஜூலை 27ஆம் தேதி அவர் மீண்டும் வங்கிக்குச் சென்று லாக்கரை திறந்துள்ளார். அப்போது பல ஆண்டுகளாக பாதுகாப்பாக இருப்பதாக நம்பியிருந்த நகைகள் எதுவும் அங்கு இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. லாக்கர் காலியாக இருந்த நிலையில், தனது நகைகள் எங்கே சென்றன என்பது குறித்து வங்கி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ராஷ்மி அரோரா போலீசாரிடம் புகார் அளித்ததுடன், வங்கி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் இணைந்து தனது நகைகளை முறைகேடாக எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் கிளை மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நகைகள் உண்மையில் எவ்வாறு காணாமல் போனது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. போலீஸ் விசாரணையின் முடிவில்தான் அதற்கான காரணம் தெரியவரும்.

விசாரணையில் முக்கியமாக கவனம் பெறும் அம்சங்களில் ஒன்று லாக்கர் எப்போது கடைசியாக திறக்கப்பட்டது என்பதாகும். போலீசார் தெரிவித்த தகவலின்படி, ராஷ்மி அரோரா 2020ஆம் ஆண்டில் இரண்டு முறை லாக்கரை திறந்ததற்கான பதிவுகள் வங்கியின் பதிவேட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பதிவுகள் தற்போது விசாரணையில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன. அந்த காலகட்டத்தில் லாக்கரை யார் அணுகினர், நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டனவா, அப்போது லாக்கரில் நகைகள் இருந்தனவா என்பன போன்ற கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் தேடி வருகின்றனர். மேலும், வங்கியின் CCTV காட்சிகள் மற்றும் லாக்கர் தொடர்பான ஆவணங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. லாக்கர் அறைக்குள் யார் யார் சென்றனர், சாவி அல்லது அணுகல் நடைமுறையில் ஏதேனும் முறைகேடு நடந்ததா, வங்கி ஊழியர்களின் பதிவுகளில் முரண்பாடுகள் உள்ளனவா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருவதாக கான்பூர் DCP அதுல் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் வங்கி லாக்கர்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பலர் தங்களது நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பதற்காக வங்கி லாக்கர்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் நீண்ட காலம் லாக்கரை பயன்படுத்தாமல் இருப்பவர்கள், லாக்கர் வாடகை செலுத்தப்பட்டு வருகிறதா, கணக்கு மற்றும் லாக்கர் தொடர்பான பதிவுகள் சரியாக உள்ளனவா என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது அவசியம் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. தற்போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் எவ்வாறு காணாமல் போனது என்பதே போலீஸ் விசாரணையின் மையமாக உள்ளது. வங்கி பதிவுகள், CCTV காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் நடத்தப்படும் விசாரணை ஆகியவற்றின் மூலம் உண்மை நிலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட ஆண்டுகளாக பாதுகாப்பாக இருப்பதாக நம்பிய ஒரு லாக்கர் காலியாகக் காணப்பட்ட சம்பவம், வங்கி பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com