
இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த எஸ்-400 ட்ரையூம்ஃப் (S-400 Triumf) வான் பாதுகாப்பு அமைப்புகளின் எஞ்சிய யூனிட்ஸ்களின் விநியோகம் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவில் இது ஒரு புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்தியாவும் ரஷ்யாவும் ஐந்து எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்காக சுமார் $5.5 பில்லியன் (ஏறக்குறைய ரூ. 40,000 கோடி) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏற்கனவே மூன்று அலகுகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு, நாட்டின் முக்கிய எல்லைப் பகுதிகளில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், இவை வட மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, உலகின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது எதிரி போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், உளவு விமானங்கள், ஆளில்லா விமானங்கள் (drones) மற்றும் ஏவுகணைகளை 400 கி.மீ. தொலைவில் இருந்தே கண்டறிந்து, தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புக்கு ஒரு வலிமையான 'வெளி அடுக்கு பாதுகாப்பு கவசம்' கிடைத்துள்ளது.
ஆரம்பத்தில், இந்த ஏவுகணை அமைப்புகளின் விநியோகம் 2023-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் சில தளவாட சவால்கள் காரணமாக இந்த விநியோகம் பலமுறை தாமதமானது. எனினும், ரஷ்யா மீதமுள்ள இரண்டு அலகுகளை 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளில் இது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
எஸ்-400 அமைப்புகளை வாங்குவதற்கான இந்தியாவின் முடிவு, சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. அமெரிக்கா, 'காட்ஸா' (CAATSA - Countering America’s Adversaries Through Sanctions Act) சட்டத்தின் கீழ் ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக எச்சரித்திருந்தது. ஆனாலும், இந்தியா தனது நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவுடனான உறவில் உறுதியாக நின்றது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களில் சமரசம் செய்யாது என்பதை இந்த ஒப்பந்தம் தெளிவுபடுத்தியது.
சமீபத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சர்வதேச மாநாடு ஒன்றின் sidelines-ல் சந்தித்தபோது, இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவு மேலும் வலுவடைந்து வருவதாகத் தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, அமெரிக்காவின் புதிய வர்த்தக வரியை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில், ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று புதின் உறுதியளித்தார்.
தற்போதுள்ள எஸ்-400 அமைப்புகள், நாட்டின் வான் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புடன் (Integrated Air Command and Control System - IACCS) முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன. இது, பல்வேறு பாதுகாப்பு அடுக்குகளையும், ராடார் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல்பட உதவுகிறது. இதனால், எந்தவொரு வான்வழி அச்சுறுத்தலுக்கும் விரைவாகவும், திறம்படவும் பதிலளிக்க முடியும்.
அதேசமயம், இந்தியா தனது சொந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 'ப்ராஜெக்ட் குஷா' (Project Kusha) எனப்படும் உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பு, 350 கி.மீ. வரம்பில் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இது 2028-2029-க்குள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்