
நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டத்தில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை, கடந்த 8ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
இதேபோல் ஜூன் 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், புதிய தேதி வழங்குமாறு அவர் கோரியிருந்தார். இதையடுத்து ஜூன் 13 ஆம் தேதி டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியிருந்தது.