உடைக்கிறதா இந்தியா கூட்டணி? “ரகசிய உடன்பாடு” ஸ்டாலினை குறிவைக்கும் மம்தா…

அந்த ஆணையத்திற்கு தென்னிந்திய மாநிலத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது..
mamtha about mk stalin
Published on
Updated on
2 min read

மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, திமுக தலைவரான மு.க. ஸ்டாலினுக்கும், காங்கிரஸுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்துடன் (ECI) ஒரு ரகசிய உடன்பாடு இருக்கலாம் என்று குற்றம் சாறியுள்ளார்.

மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, மம்தாவின் இந்த கருத்துக்கள் பாஜக எதிர்ப்பு சக்திகளின் தேசிய கூட்டணியான 'இந்தியா' அணியின் இடையே சர்ச்சையைத் தூண்டியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் மட்டுமின்றி, காங்கிரஸ், சிபிஐ-எம், திமுக மற்றும் பிற கட்சிகள் உட்பட 28 பாஜக எதிர்ப்பு கட்சிகள் இந்தியா அணியில் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் மம்தா பானர்ஜி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நகாஷிபாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது, ​​காங்கிரஸ், திமுக மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு இடையே இருப்பதாகக் கூறப்படும் “இரகசிய உடன்பாடு” குறித்து மம்தா பேசினார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் தூண்டுதலின் பேரில், வங்காளத்தில் பெருமளவிலான வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, வாக்காளர் பட்டியல்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு சிறப்புத் தீவிர மறுஆய்வை (SIR) மேற்கொண்டு வருவதாக மம்தா பலமுறை கூறிவந்த நிலையில், 'அவரது சந்தேகங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை' என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் ஆணையத்தைக் குறிவைத்துப் பேசிய மம்தா, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட வங்காளத்தைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். “அனைவரும் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள், மேலும் அந்த ஆணையத்திற்கு தென்னிந்திய மாநிலத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. காங்கிரஸுக்கும் ஸ்டாலினுக்கும் அந்த ஆணையத்துடன் ஒரு ரகசிய உடன்பாடு வைத்திருக்கலாம்". பொதுவாகவே அரசியல் வட்டாரங்களில் மம்தாவும் ஸ்டாலினும் ஒரு நல்ல அரசியல் உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே நன்கு அறியப்பட்ட ஒரு விஷயமாகும். சில சமயங்களில், கூட்டணியை வழிநடத்த மம்தா அல்லது ஸ்டாலின் இருவரில் ஒருவரை கூட்டணிக் கட்சிகள் பரிந்துரைத்தும் கூட உள்ளன. இந்தப் பின்னணியில், தேர்தலுக்கு முன்னதாக நக்காஷிபாராவில் மம்தா தெரிவித்த இந்த கருத்துக்கள் வழக்கத்திற்கு மாறானவையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சம்சர்கஞ்சில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றியபோது, ​​அவர், “திமுகவிற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே உள்ள ரகசிய உடன்பாடு என்ன? வங்காளத்தைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும் அவர்களது சொந்த மாநிலத்தில் இல்லாமல், தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள்” என்று கூறியிருந்தார். இருப்பினும், அப்போது அவர் ஸ்டாலினின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், திங்களன்று நாடியாவில், அவர் நேரடியாக ஸ்டாலினின் பெயரைக் குறிப்பிட்டதால், இந்திய அணிக்குள் வெளிப்படையான ஒரு பிளவு ஏற்பட்டது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், எதிர்கால மோதலில் கொல்கத்தாவைத் தாக்குவோம் என பாகிஸ்தான் விடுத்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டி, அவர் பதவி விலக வேண்டும் என்றும் மம்தா கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com