நடுத்தர வர்க்கத்தினருக்கு அடிச்சது லக்! EPF வட்டி விகிதத்தில் அதிரடி முடிவு - உங்கள் கணக்கிற்கு வரப்போகும் கூடுதல் பணம் எவ்வளவு?

பிஎஃப் கணக்கில் 5 லட்சம் ரூபாய் இருப்பு இருந்தால், இந்த 8.25 சதவீத வட்டி விகிதத்தின் மூலம் உங்களுக்கு ஆண்டுக்கு சுமார்...
EPF
Published on
Updated on
2 min read

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறைத் தொழிலாளர்களின் நீண்டகால சேமிப்பான வருங்கால வைப்பு நிதி (EPF) மீதான வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டிற்கான பிஎஃப் வைப்புத்தொகைக்கு 8.25 சதவீத வட்டியைத் தொடர்ந்து வழங்கத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) முடிவு செய்துள்ளது. டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) 239-வது கூட்டத்தில் இந்த அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அதே அளவில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், சந்தையில் உள்ள மற்ற சேமிப்புத் திட்டங்களை விட பிஎஃப் முதலீட்டிற்கு அதிக வட்டி வழங்கப்படுவது ஏழு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. உண்மையில், இபிஎஃப்ஓ-வின் முதலீட்டுக் குழு மற்றும் நிதி அமைச்சகம் வட்டி விகிதத்தை 8.10 சதவீதமாகக் குறைக்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தன. அவ்வாறு குறைத்திருந்தால் அரசுக்குச் சுமார் 1,675 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கும். ஆனால், தொழிலாளர்களின் நலன் மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, 944 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும், வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாகவே தக்கவைக்க அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த வட்டி விகிதமானது மத்திய நிதி அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். நிதி அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியவுடன், நடப்பு நிதியாண்டின் இறுதியில் வட்டித் தொகை நேரடியாகத் தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். பொதுவாக, பிஎஃப் வட்டி கணக்கீடு என்பது மாதந்தோறும் கணக்கிடப்பட்டாலும், நிதியாண்டின் இறுதியில் ஒரே தவணையாகவே கணக்கில் சேர்க்கப்படும். ஒருவேளை உங்கள் பிஎஃப் கணக்கில் 5 லட்சம் ரூபாய் இருப்பு இருந்தால், இந்த 8.25 சதவீத வட்டி விகிதத்தின் மூலம் உங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 41,250 ரூபாய் வட்டியாக மட்டுமே கிடைக்கும். இது வங்கி வைப்பு நிதி (FD) போன்ற பிற முதலீடுகளை விடக் கூடுதல் லாபகரமானதாகும்.

கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றைப் பார்த்தால், 2021-22 ஆம் ஆண்டில் பிஎஃப் வட்டி விகிதம் 8.10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இது கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும். அதன் பிறகு 2022-23-ல் 8.15 சதவீதமாகவும், 2023-24-ல் 8.25 சதவீதமாகவும் படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போதைய சூழலில் வட்டி விகிதத்தைக் குறைக்காமல் நிலைநிறுத்தியிருப்பது, நடுத்தர வர்க்க மக்களின் ஓய்வுக்காலச் சேமிப்பிற்குப் பெரும் வலுசேர்க்கும். மேலும், 36 மாதங்களுக்கு மேலாகப் பங்களிப்பு ஏதுமின்றி முடங்கிக் கிடக்கும் கணக்குகளுக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது என்பதால், சந்தாதாரர்கள் தங்களது கணக்கைச் செயல்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் தவிர சில நிர்வாகச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, வருமான வரித்துறையினரால் அங்கீகரிக்கப்பட்டு இன்னும் பிஎஃப் சட்டத்தின் கீழ் வராத அறக்கட்டளைகளுக்காக ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய 'பொது மன்னிப்புத் திட்டம்' (Amnesty Scheme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிஎஃப் விலக்கு பெறுவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு, அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com