இந்தியாவின் அமெரிக்க தூதராக இருக்கும் செர்ஜியோ கோர் (Sergio Gor) சமீபத்தில் கேஷுவலாக பகிர்ந்த சில கருத்துகள் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் G7 மாநாட்டில் சந்தித்து பேசினர். அப்போது இந்திய அரசு தரப்பில் பத்திரிக்கையாளர்களிடம் கேள்வி பதில் அமர்வு கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கோரிக்கையை ட்ரம்ப் மீறியுள்ளார்.
செர்ஜியோ கோர் சமீபத்திய நேர்காணலில் ட்ரம்ப் என்ன எப்போதும் எதிர்பாரதாதைச் செய்வார் என்ற ரீதியில் பேசியிருந்தார். அதில், "இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜி7 உச்சிமாநாட்டிற்கு அதிபர் ட்ரம்புடன் நான் சென்றிருந்தபோது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.
நாங்கள் மேடைக்குப் பின்னால் இருந்தபோது, ஒரு கட்டத்தில் அதிபரும் நானும் மட்டுமே தனியாக இருந்தோம்.
அப்போது அவர் என்னிடம், ‘இந்தியத் தரப்பில் என்னென்ன விஷயங்களைப் பேசப்போகிறார்கள்?’ என்று கேட்டார். நாங்கள் சில தலைப்புகளைப் பற்றி விவாதித்தோம்.
பிறகு அவர், ‘அவர்கள் தரப்பில் ஏதேனும் கோரிக்கைகள் இருக்கிறதா?’ எனக் கேட்டார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஒரே ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது ‘செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்கலாம், ஆனால் கேள்வி-பதில் நேரத்துடன் கூடிய முழுமையான செய்தியாளர் சந்திப்பாக அது இருக்கக் கூடாது’ என்பதுதான் அது.
அதை நான் அதிபரிடம் கூறியதும், ‘கண்டிப்பாக, அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்று ஒப்புக்கொண்டார்.
பிறகு கூட்டம் தொடங்கியது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கேமராக்களுடன் செய்தியாளர்கள் உள்ளே வந்தார்கள்.
ஒருபுறம் அதிபரும், மறுபுறம் பிரதமரும் அமர்ந்திருந்தனர். இருவருமே சில நிமிடங்கள் பேசினார்கள். பேசி முடித்த அடுத்த கணமே, அதிபர் செய்தியாளர்களைப் பார்த்து, ‘ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?’ என்று வழக்கம் போல் கேட்டுவிட்டார்!
அவ்வளவுதான், அனைத்தும் தலைகீழாக மாறியது. அடுத்த 45 நிமிடங்களுக்கு அனைத்து விஷயங்களைப் பற்றியும் திறந்த மனதோடு பேசக்கூடிய ஒரு செய்தியாளர் சந்திப்பாகவே அது மாறிப்போனது.” என்றார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா, "அமெரிக்க தூதரின் கருத்து குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது.
பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் தப்பிப்பதற்காக, வெளிநாட்டு அரசாங்கங்களிடம் கெஞ்சுவது மோடிக்கு வழக்கமான ஒன்றோ என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இவர் மன்றாடிக் கேட்கிறார், ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை.
போதாக்குறைக்கு, 'நாங்கள் அவர் கோரிக்கையைக் கண்டு கொள்ளவே இல்லை' என்பதை வெளிப்படையாகச் சொல்லி, சர்வதேச அரங்கில் அவரை பகிரங்கமாகக் கேலியும் செய்கிறார்கள்!
இத்தனை நடந்த பிறகும், மோடியால் எதிர்த்துக் கேட்க முடிவதில்லை... காரணம், அவர் பலவீனமான நிலையில் இருக்கிறார் (Compromised)!"
மேலும் அவர், "இது ஏதோ நரேந்திர மோடி என்ற தனிநபரைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல. இந்தியப் பிரதமரின் அரியணையும் அந்தப் பதவியின் கண்ணியமும்தான் உலகளவில் சிறுமைப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்படுகிறது. நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியதற்காக மோடி எத்தகைய கடுமையான கண்டனத்துக்கும் தகுதியானவர்தான்" என்று சாடியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்