100 வருட பாரம்பரிய கிளப்பை காலி செய்ய உத்தரவு: டெல்லியில் வெடித்தது புதிய சர்ச்சை!

தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்ற முடிவு செய்த பிறகு, 1913-ம் ஆண்டு இந்தக் கிளப் உருவாக்கப்பட்டது
gymkhana club
Published on
Updated on
2 min read

டெல்லியின் மிக முக்கியமான மற்றும் பாரம்பரியமிக்க ஜிம்கானா கிளப்பை ஜூன் 5-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (L&DO) உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நிலம் அவசியமாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இந்த கிளப்பை அகற்ற எடுக்கப்பட்ட முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மே 26-ம் தேதி நடந்த விசாரணையின்போது, சட்டம் மற்றும் நடைமுறைகளின்படி மட்டுமே வெளியேற்றும் பணிகள் நடக்கும் என்று மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது.

இந்தக் கிளப்பிற்கு ஒரு நீண்ட கால வரலாறு உண்டு. 1911-ம் ஆண்டு இந்திய அரசு தனது தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்ற முடிவு செய்த பிறகு, 1913-ம் ஆண்டு இந்தக் கிளப் உருவாக்கப்பட்டது. 1928-ம் ஆண்டு அரசு இந்த நிலத்தை குத்தகைக்கு வழங்கியது. தொடக்கத்தில் இது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இது இந்திய அதிகாரவர்க்கம், நீதித்துறை மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான இடமாக மாறியது. புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ராபர்ட் டி ரஸ்ஸல் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம், நேருவின் இல்லமாக இருந்த தீன் மூர்த்தி பவன் மற்றும் கன்னாட் பிளேஸ் ஆகியவற்றின் அதே வடிவமைப்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்திற்குப் பிறகு, டெல்லியில் உள்ள நிலங்களை மத்திய அரசு தனது நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் மூலம் நிர்வகித்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகள், நிறுவனங்கள் மற்றும் கிளப்புகளுக்காக இந்த நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. குத்தகை காலம் சில சமயங்களில் நிரந்தரமாகவும் (Perpetual) அல்லது 99 ஆண்டுகள் போன்ற குறிப்பிட்ட காலத்திற்காகவும் இருக்கலாம். குடியிருப்பு சொத்துக்களில் பெரும்பாலானவை இப்போது தனிநபர் உரிமையாக (Freehold) மாற்றப்பட்டுவிட்டாலும், இத்தகைய பெரிய நிறுவன நிலங்கள் இன்னும் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

தற்போதைய சர்ச்சைக்கு முக்கியக் காரணம், அரசு இந்தக் கிளப் அமைந்துள்ள 27.3 ஏக்கர் நிலத்தை 'பொது நோக்கம்' (Public Purpose) மற்றும் 'பாதுகாப்பு' காரணங்களுக்காகத் திரும்பப் பெற விரும்புவதுதான். பிரதமர் இல்லத்திற்கு அருகில் இந்த இடம் அமைந்திருப்பதாலும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அப்புறப்படுத்தி வருவதாலும், இந்த நிலத்தைப் பெரிய அளவில் திட்டமிட்டு அரசு பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. குத்தகை ஒப்பந்தத்தில் உள்ள 4-வது பிரிவின்படி, பொதுத் தேவைக்காக எந்த நேரத்திலும் நிலத்தை அரசு திரும்பப் பெறலாம் என்ற விதியைப் பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள கிளப்பின் நிர்வாகக் குழு, 14,000 உறுப்பினர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளது. மேலும், 2022-ம் ஆண்டு முதல் தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT) உத்தரவின் பேரில் அரசு நியமித்த குழுவே இந்தக் கிளப்பை நிர்வகித்து வருகிறது. கிளப் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. இப்போது அரசு நியமித்த குழுவே கிளப்பை நிர்வகிக்கும் நிலையில், அந்த இடத்தையே அரசு திரும்பக் கேட்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உறுப்பினர்களும் ஊழியர்களும் நீதிமன்றத்தை நாடியிருப்பதால், இந்த விவகாரம் எந்தத் திசையில் செல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பு டெல்லி வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com