
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். இதையடுத்து, இன்று பிரியங்கா காந்தி நாடாளுமன்ற மக்களவையில் எம்பியாக பதவியேற்று கொண்டார். பிரியங்கா காந்தி கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பதவியேற்று கொண்டார்.
அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிபிரமாணம் செய்து வைத்தார். நாடாளுமன்ற அவையின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த தனது சகோதரர் ராகுல் காந்தியை, பிரியங்கா காந்தி வணங்கிவிட்டு சென்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
பதவியேற்பதற்காக நாடளுமன்றத்திற்கு வருகை தந்த பிரியங்கா காந்தியை, ராகுல்காந்தி புகைப்படம் எடுத்து வரவேற்றார்.
இதன்மூலம், மக்களவையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், மாநிலங்களவையில் சோனியா காந்தியும் எம்.பி.க்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.