20 ஆண்டுகள் குடியிருந்த பங்களா...!! காலி செய்யும் ராகுல்...!!

20 ஆண்டுகள் குடியிருந்த பங்களா...!! காலி செய்யும் ராகுல்...!!
Published on
Updated on
1 min read

எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் எதிரொலியாக டெல்லியில் உள்ள அரசுக் குடியிருப்பை ராகுல்காந்தி இன்று காலி செய்கிறார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது அவா் இந்திய மக்களின் பணத்தை ஏமாற்றி வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி,.. என எல்லோரின் பெயரின் பின்னாலும் உள்ள மோடி என்ற பின்னொட்டு குறித்து கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினா் புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மறுத்ததால் குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கடந்த மாதம் 23-ம் தேதி தீா்ப்பு வழங்கப்பட்டது.  2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டதை தொடா்ந்து ராகுல் காந்தியின் எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஏப்ரல் 3ம் தேதி ராகுல்காந்தி நேரில் ஆஜராகி சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது அவரது ஜாமீனை நீட்டித்தும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, வழக்கு 2 நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த நிலையில், ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதிசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக ஏப்ரல் 23ம் தேதிக்குள் டெல்லி துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யுமாறு ராகுல்காந்திக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. இதனையொட்டி ஏற்கனவே தனது அலுவலகத்தின் உடைமைகளை, தாய் சோனியா காந்தியின் இல்லத்திற்கு ராகுல் அனுப்பி வைத்தார். இந்நிலையில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் குடியிருந்த தனது பங்களாவை ராகுல்காந்தி இன்று காலி செய்கிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com