விவசாயமா? பெட்ரோலியமா? ஈரான் போரால் இந்திய விவசாயத் துறைக்கு வந்திருக்கும் மிகப்பெரிய சவால்!

பயிர்களுக்குப் போடப்படும் யூரியா போன்ற ரசாயன உரங்களைத் தயாரிக்கவும் இயற்கை எரிவாயு மிகவும் அவசியம்
iran war impacts on indian agriculture
Published on
Updated on
2 min read

இன்றைய நவீன காலத்தில் விவசாயம் என்பது நிலமும் விதையும் மட்டுமே சம்பந்தப்பட்டது கிடையாது, அது முழுமையாக பெட்ரோலியப் பொருட்களையும் இறக்குமதிச் சந்தையையும் நம்பி இருக்கிறது. இதனைத்தான் நிபுணர்கள் இந்திய விவசாயத்தின் 'ஃபாசிலைசேஷன்' (Fossilisation) அல்லது நிலக்கரி மற்றும் எரிபொருள் சார்ந்த மாற்றம் என்று அழைக்கிறார்கள். தற்போது நடைபெற்று வரும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம், இந்திய விவசாயத்தின் இந்த பலவீனமான பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. ஒரு காலத்தில் மாடுகளையும் இயற்கை உரங்களையும் நம்பியிருந்த நம்முடைய விவசாயம், இன்று எப்படி டிராக்டர்களையும் ரசாயன உரங்களையும் நம்பி ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

பசுமைப் புரட்சிக்கு முன்பு வரை இந்திய விவசாயம் என்பது கால்நடைகளை மையமாக வைத்தே இயங்கியது. வயலை உழுவதற்கு காளை மாடுகளும், மண்ணிற்குச் சத்து கொடுக்க அவற்றின் சாணமும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த சில தசாப்தங்களில் இந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. 1970-களில் சுமார் 8 கோடிக்கும் அதிகமாக இருந்த உழைக்கும் காளைகளின் எண்ணிக்கை, 2019-ல் வெறும் 3.4 கோடியாகக் குறைந்துவிட்டது. இதற்கு மாறாக 1940-களில் வெறும் ஐந்தாயிரமாக இருந்த டிராக்டர்களின் எண்ணிக்கை இப்போது ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இந்த மாற்றம் விவசாயத்தை வேகப்படுத்தியிருக்கலாம், ஆனால் அதே சமயம் விவசாயிகளை டீசல் மற்றும் பெட்ரோலிய இறக்குமதிக்காக அந்நிய நாடுகளை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

ஈரான் போர் ஏன் இந்திய விவசாயத்திற்கு ஆபத்தாது என்றால், உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாக விளங்குவது ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz). இந்தப் பாதையை ஈரான் முடக்கினால் உலக நாடுகளுக்குச் செல்லும் எரிபொருட்களின் சப்ளை பாதிக்கப்படும். இந்திய விவசாயத்திற்குத் தேவையான டீசல் மட்டுமல்லாமல், பயிர்களுக்குப் போடப்படும் யூரியா போன்ற ரசாயன உரங்களைத் தயாரிக்கவும் இயற்கை எரிவாயு மிகவும் அவசியம். இந்தியா தனது உரத் தேவையை பூர்த்தி செய்ய பெருமளவில் இறக்குமதியையே நம்பியுள்ளது. போர் காரணமாக இந்தப் போக்குவரத்து தடைபட்டால், உரங்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் அல்லது உரங்களே கிடைக்காத தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு பருவமழை இயல்பை விடக் குறைவாகவே இருக்கும் என்று கணித்துள்ளது. மழையின் அளவு குறைந்தால் விவசாயிகள் பயிர்களைக் காப்பாற்ற நிலத்தடி நீரை இறைக்க மோட்டார் பம்புகளை அதிக நேரம் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்குத் தேவையான மின்சாரம் அல்லது டீசலின் விலையும் போர் சூழலால் அதிகரித்தால், விவசாயிகளுக்கு இரட்டிப்புப் பாதிப்பு ஏற்படும். ஒரு பக்கம் சாகுபடி செலவு அதிகரிப்பது, மறு பக்கம் உரத் தட்டுப்பாடு என விவசாயிகள் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது இறுதியில் சந்தையில் காய்கறிகள் மற்றும் தானியங்களின் விலையை உயர்த்தி, சாதாரண பொதுமக்களின் சமையலறையையும் கடுமையாகப் பாதிக்கும்.

விவசாயத்தில் ஏற்பட்டுள்ள இந்த 'பாசிலைசேஷன்' அதாவது முழுமையாக எரிபொருளைச் சார்ந்திருக்கும் நிலை என்பது ஒரு கண்ணிவெடி போன்றது. உரங்களுக்கான மானியத்தை அரசு உயர்த்தி வழங்கினாலும், உலகச் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும்போது பணத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஈரான் போன்ற நாடுகளில் நடக்கும் மோதல்கள் இந்திய விவசாயத்தின் வேர்களை அசைத்துப் பார்ப்பது இதனால்தான். ஏற்கனவே உக்ரைன் போரின் போது உரங்களின் விலை அதிகரித்ததை நாம் பார்த்தோம், இப்போது ஈரான் போர் இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், இந்திய விவசாயம் மீண்டும் தற்சார்பு நிலையை நோக்கி நகர வேண்டும். ரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களையும், முழுமையாக டீசலை நம்பியிருக்காமல் சூரிய சக்தி மூலமான பாசன முறைகளையும் ஊக்குவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில், உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போர், நம் நாட்டு ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிக்கொண்டே இருக்கும். இப்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, இந்திய விவசாயக் கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com