வாக்குப் பட்டியலில் பிரேசில் பெண்! ராகுல் காந்தியின் குற்றச்சாட்டால் உலகறியப்பட்ட அழகி லாரிசா நெரி - அவர் கொடுத்த ஷாக் ரிப்ளை

ஆளும் கட்சிக்கு எதிராக ராகுல் காந்தி வைத்த இந்தக் குற்றச்சாட்டு, உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது
world-famous beauty Larisa Neri Brazilian woman on indian voter list
world-famous beauty Larisa Neri Brazilian woman on indian voter list
Published on
Updated on
2 min read

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் வீசிய 'ஹைட்ரஜன் குண்டு' எனப்படும் குற்றச்சாட்டுகள், இந்தியத் தேர்தல் முறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியதுடன், ஒரு பிரேசில் நாட்டுப் பெண்ணின் வாழ்க்கையிலும் எதிர்பாராத அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகவும் ராகுல் காந்தி பரபரப்புப் புகார் அளித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த அவர் பயன்படுத்திய ஒரு முக்கியமான ஆதாரம், ஒரு வெளிநாட்டு அழகியின் புகைப்படம். இந்தப் புகாரால் உலகறியப்பட்ட அந்தப் பிரேசில் நாட்டுப் பெண் லாரிசா நெரி என்பவர் ஆவார்.

ராகுல் காந்தி தனது செய்தியாளர் சந்திப்பில், ஹரியானா வாக்காளர் பட்டியலில் ஒரே பெண்ணின் புகைப்படம் 22 முறை இடம்பெற்றுள்ளதைக் காண்பித்தார். அதுவும், அந்தப் படம் ஒரு பிரேசில் அழகியினுடையது என்றும், அந்தப் போலிப் பதிவுகள் சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி போன்ற பெயர்களில் இருப்பதாகக் குறிப்பிட்டார். "இங்குள்ள 10 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் அவர் பல பெயர்களில் வாக்களிக்கும் வகையில் இந்தப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் தவறு அல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்ட மையப்படுத்தப்பட்ட சதி" என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டால், அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் என்று இணையத்தில் இந்திய அளவில் பெரும் தேடல் தொடங்கியது.

இந்தத் தேடலின் விளைவாக, அந்தப் பெண் பிரேசில் நாட்டைச் சேர்ந்த லாரிசா நெரி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய புகைப்படம் இந்தியாவில் தேர்தல் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட செய்தி கேட்டு அவர் பேரதிர்ச்சிக்குள்ளானார். பல இந்தியச் செய்தியாளர்களும், ஊடகங்களும் அவரைத் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கிய பின்னரே, தனது புகைப்படம் இவ்வளவு பெரிய அரசியல் சர்ச்சையில் சிக்கியிருப்பது அவருக்குத் தெரியவந்தது. "இது என்ன பைத்தியக்காரத்தனம்?" என்று அவர் திகைப்புடன் கேள்வி எழுப்பினார். தான் இந்தியாவில் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கவில்லை என்றும், இந்திய அரசியலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

லாரிசா நெரியின் புகைப்படத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்தபோது, அந்தப் படத்தைத் தான் சாதாரணமாக எடுத்ததாகவும், அது பிரேசில் நாட்டுப் புகைப்படக்காரரான மத்தியஸ் ஃபெரேரோ என்பவரால் படமாக்கப்பட்டு, அன்ஸ்பிளாஷ் (Unsplash) எனப்படும் பொதுவான படத்தொகுப்பு தளத்தில் இருந்து எவரும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது என்பதும் தெரியவந்தது. அதாவது, ஹரியானா மாநில வாக்காளர் பட்டியலைத் தொகுத்தவர்கள், வாக்காளரின் உண்மையான புகைப்படத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இணையத்தில் இருந்து இலவசமாகக் கிடைக்கும் ஒரு பிரேசில் அழகியின் படத்தை எடுத்து, அதைப் பல பெயர்களில், பல இடங்களில் போலியாகப் பதிவு செய்யப் பயன்படுத்தியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

ராகுல் காந்தியின் இந்த 'வாக்குத் திருட்டு' (வோட் சோரி) குற்றச்சாட்டானது, லாரிசா நெரி என்ற வெளிநாட்டுப் பெண்மணியை மையப்புள்ளியாக்கி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை நடைமுறையான வாக்காளர் பட்டியலில் இருக்கும் ஓட்டைகளையும், மோசடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நடந்ததாகக் கூறப்படும் தேர்தல் மோசடி, ஒரு சர்வதேசப் பெண்மணியின் கவனத்தை ஈர்த்ததுடன், இந்தியாவின் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் தேசிய அளவில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. இதன்மூலம், ஆளும் கட்சிக்கு எதிராக ராகுல் காந்தி வைத்த இந்தக் குற்றச்சாட்டு, உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com