வங்கிக்கணக்கிற்கு முன்கூட்டியே வந்த மகளிர் உரிமைத் தொகை...மகிழ்ச்சியில் மகளிர்!

Published on
Updated on
1 min read

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்றே வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, 2023-24ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டன. மேலும், இந்த திட்டத்திற்காக இதுவரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதில் தேர்வாகியுள்ள பயனாளிகளுக்கு வழங்க ஏ.டி.எம்.கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த கார்டுகளில் அரசு முத்திரை, திட்டத்தின் பெயர், வங்கி பெயர், பயனாளிகள் பெயர், செல்லுபடியாகும் தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றே பயனாளர்களின் சில வங்கி கணக்குகளுக்கு 1000 ரூபாய் வரவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்க இருந்த நிலையில், இன்று 1000 ரூபாய் வரவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com