
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது
இலங்கை சிறையிலிருந்தது விடுவிக்கப்பட்ட 3 புதுக்கோட்டை மற்றும் கடலூர் மீனவா்கள் சென்னை வந்தனா். தமிழ்நாடு புதுக்கோட்டை, கடலூர் பகுதியை சேர்ந்த மீனவா்கள் ஐயப்பன், அருள்ராஜ், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கடந்த மாதம் 19ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 3 மீனவர்களையும் கைது செய்தனா்.
மீனவர்கள் 3 பேரை விடுதலை
தமிழ்நாடு மீனவர்களை கைது செய்து படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேசிய நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் இலங்கை நீதிமன்றம் தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை விடுதலை செய்தது.
மீனவா்களை வரவேற்ற மீன்வளத்துறை அதிகாரிகள்
பின்னர் புதுக்கோட்டை, கடலூர் மீனவா்கள் 3 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். 3 மீனவா்களுக்கும் அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை வரவேற்று தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.