தமிழ்நாடு
சிக்னலைக் கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு...!
சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கு அருகே சிக்னலைக் கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதியதால் உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரிஷி கௌதம் என்பவர் சென்னையில் தங்கி தகவல் தொழில்நுட்ப பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை தர்மபுரியில் இருந்து சென்னைக்கு வந்து காசி திரையரங்கம் சிக்னலில் இறங்கி உள்ளார்.
பின்னர் காசி சிக்னல் 100 அடி சாலையை கடக்க முயன்ற போது, ரிஷி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட ரிஷி அருகில் வந்த அரசு விரைவு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து, விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து குறித்தான சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.