விஜய்க்காக.. சுப்ரீம் கோர்ட்டில் நின்று புட்டு புட்டு வைத்த ஆதவ் அர்ஜுனா? இன்னமும் வெளியே வராத புஸ்ஸி ஆனந்த்!

கட்சியின் மிக உயரிய பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் எங்கே சென்றார்? அவர் ஏன் இன்னும் வெளிவரவில்லை? என்பது பரவலான ஒரு விவாதமாக கட்சியினரிடமே இருக்கிறது.
Pussy Anand who has not come out yet
Pussy Anand who has not come out yet
Published on
Updated on
2 min read

நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (TVK) சார்பில் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம், 41 உயிர்களைப் பலி கொண்டது. இந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்குப் பிறகு, TVK நிர்வாகி ஆதவ் அர்ஜுனா புது டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பல கேள்விகளைப் முன் வைத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய முக்கியக் கேள்விகள்

"கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் பிரசாரம் செய்ய எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. வேறு வழியின்றி, கரூர் காவல்துறை சொன்ன இடத்தில்தான் எங்கள் தலைவர் விஜய் பிரசாரம் செய்தார்."

"வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், நாங்கள் கரூர் எல்லைக்கு வந்தபோது காவல்துறையினர்தான் எங்களை வரவேற்றனர். கூட்ட நெரிசல் இருக்கும் ஒரு இடத்துக்கு காவல்துறை இவ்வாறு வரவேற்றது ஏன்? தவறு நடக்கும் என்று தெரிந்திருந்தால், காவல்துறை எங்களை ஏன் எல்லைக்கே வந்து வரவேற்றது?"

"விஜய் தாமதமாகப் பிரசாரத்துக்கு வந்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் அபாண்டமானது. கரூரில் பிரசாரம் செய்ய பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை காவல்துறை அனுமதி அளித்திருந்தது. தலைவர் அதற்குள்தான் கரூர் வந்துள்ளார். எனவே, தாமதம் என்ற குற்றச்சாட்டு பொய்யானது."

"ஒன்றும் செய்யாத TVK-வினரை தீவிரவாதிகள் போலக் காவல்துறையினர் தடியடி நடத்தினர்."

"கூட்ட நெரிசல் நடந்தபோது, காவல்துறை அதிகாரிகள்தான் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர். அப்போதும் நாங்கள் கரூர் எல்லையில்தான் நின்றிருந்தோம். ஆனால், 'நீங்கள் உள்ளே வந்தால் கலவரமாகிவிடும்' என்று காவல்துறை கூறியதால்தான் அங்கிருந்து வெளியேறினோம். எல்லோரும் சொல்வது போல நாங்கள் தப்பித்து ஓடவில்லை."

"TVK என்ற அரசியல் கட்சியை முடக்க வேண்டும் என திமுக முயற்சி செய்கிறது."

"சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கில் TVK-வை இணைக்காமலேயே (எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே), நீதிபதி பல்வேறு கருத்துகளை (Adverse Observations) பிறப்பித்திருந்தார்." என்று தெரிவித்துள்ளார்.

விஜய்க்காக நிற்கும் ஆதவ் அர்ஜுனா; எங்கே புஸ்ஸி ஆனந்த்?

கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது முதற்கட்டமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின. அன்றிலிருந்து இன்றுவரை, புஸ்ஸி ஆனந்த் பொதுவெளியில் பேசுவதையோ, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதையோ, அல்லது கட்சியின் சார்பில் ஊடகங்களைச் சந்திப்பதையோ முழுமையாகத் தவிர்த்து வருகிறார். அவர் முற்றிலும் தலைமறைவாகிவிட்டார் என்றே கட்சிக்குள் பேசப்படுகிறது.

ஆனால், ஆதவ் அர்ஜுனா மிகச் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவரே உச்ச நீதிமன்றத்தில் கட்சியின் சார்பாக ஆஜராகி, திமுக அரசின் மீதும், காவல்துறையின் மீதும் நேரடியாகக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கட்சித் தலைவர் விஜய்க்காக அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று, ஊடகங்களைச் சந்திப்பதும், சட்டரீதியான நடவடிக்கைகளில் முன்னிற்பதும் ஆதவ் அர்ஜுனாதான். ஆனால், கட்சியின் மிக உயரிய பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் எங்கே சென்றார்? அவர் ஏன் இன்னும் வெளிவரவில்லை? என்பது பரவலான ஒரு விவாதமாக கட்சியினரிடமே இருக்கிறது.

கரூர் சம்பவத்தின் முழுப் பொறுப்பையும் ஆதவ் அர்ஜுனா ஏற்றுக் கொள்வது போல அவர் முன்னிறுத்தப்படுகிறார். இதனால், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் புஸ்ஸி ஆனந்தை மீறி ஆதவ் அர்ஜுனாவின் கைகளுக்குச் சென்றுவிட்டதா? TVK-வில் புஸ்ஸி ஆனந்தின் முக்கியத்துவம் குறையத் தொடங்கி, ஆதவ் அர்ஜுனா புதிய அதிகார மையமாக உருவாகி வருகிறாரா? சிபிஐ விசாரணை தொடங்கியுள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்தின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் நீடிக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com