
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்ல எனவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு உரிமையில்லை எனவும் வாதிட்டார்.
சூரியமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதை மறைத்து, தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என வாதிட்டார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும், வழக்கை நிராகரிக்க மறுத்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதிபதி பாலாஜி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.