

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் தமிழ்நாடு ஒரு வழி ஆகிவிடும் என்பது தான் உண்மை. திமுக -கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக -வின் நிலை அப்படி இல்லை. பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்தே பஞ்சாயத்துதான். மேலும் எடப்பாடி உள்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கததால்தான் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் கழன்று விட்டனர். அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த செங்கோட்டையனின் நீக்கம். ஏற்கனவே இருவருக்கும் முரண்கள் இருந்தாலும், ‘பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்’ என எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். உடனே செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் விதிகளுக்கு மாறாக, செயல்பட்ட ஓபிஎஸ் உடன் சேர்ந்து தேவர் குரு பூஜைக்கு சென்றதாகக் கூறி, கட்சியில் 50 ஆண்டுகால சீனியரான செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். உண்மையில் இபிஎஸ் எப்படி சமாளிக்க போகிறார் எனும் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஒபிஸ் -ம் தனது தனது ஆட்டத்தை துவங்கிவிட்டார்.
சின்ன ரீவைன்டர்
அதிமுக எப்போது எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ அப்போதிலிருந்து ஓபிஎஸ் தனது மவுசை இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களை திரட்டி "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.
அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் பிதாமகராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு மோடிக்கும் அவருக்கும் நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராகவும், அதிமுக உள்விவகாரங்கள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. அரசியல் ரீதியான பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காமல் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டது பன்னீர் செல்வத்துக்கு பொருளாதார ரீதியான நஷ்டத்தை ஏற்படுத்தியது நாடறிந்த உண்மை.
பாஜக -வை தீவிரமாக ஆதரித்து வந்த ஓபிஎஸ் தரப்பு திடீரென பாஜக எதிர்ப்பை நிலைநாட்டியதன் காரணம், NDA கூட்டணியில் இருந்து அவர் விலக்கப்பட்டதால் தான் என பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக, சில மாதத்திற்கு முன்னர் பாஜக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.
கூட்டணியில் விலகிய அன்றே முதல்வர் ஸ்டாலினை அடையாற்றில் உள்ள முதல்வர் இல்லத்திலேயே சென்று சந்தித்தார். சந்தித்துவிட்டு வந்த பிறகு, ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை’ என பேசியிருந்தார்.
இதற்கிடையில் தான் ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா, டிடிவி (அதிமுக -விலிருந்து நீக்கப்பட்டவர்கள்) ஆகியோர் இணைந்து முக்குலத்தோர் கூட்டணியை உருவாக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதற்கிடையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துவிட்டார். செங்கோட்டையனின் இந்த செயல் எடப்பாடியை மிகவும் பாதித்தன சொல்லப்படுகிறது.
இந்த சூழலில்தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுக்குழு கடந்த 10 -ஆம் தேதி நடைபெற்றது. இதில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தாற்காலிக அவை தலைவராக கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடிக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஓபிஎஸ் -க்கு ஆபத்தாக அமைந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக எடப்பாடியை விமர்சிக்காமல் இருந்த, டிடிவிக்கும் ஏமாற்றம் தான் என்று சொல்லப்படுகிறது. இனி நிச்சயம் எடப்பாடி ஒருபோதும் ஓபிஎஸ் -ஐ கட்சிக்குள் சேர்க்க மாட்டார் என்று சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
என்.டி.ஏ -வில் இனியும் ஓபிஎஸ் டிடிவி!!
இந்த சூழலில்தான் பாஜக -வின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை, உள்ளரங்கில் ஓபிஎஸ், டிடிவி -யை சந்தித்த கையோடு, டெல்லி சென்று அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதனால் என்.டி.ஏ கூட்டணிக்குள் ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் வருகிறார்கள் என்ற பேச்சுக்கள் அடிபட்டன.
கரணம் ஓபிஎஸ் -காண அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இதனால், வேறு வழியின்றி ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு செல்கிறார், ஏற்கனவே சுயமரியாதைதான் முக்கியம் எனக்கூறி கூட்டணியிலிருந்து வெளியில் வந்தார், தற்போது மீண்டும் அதே கூட்டணியில் இணைவது அறிவார்ந்த செயலாக இருக்காது என்கின்றனர், சில விமர்சகர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.