தமிழ்நாடு
தவறான தகவல்கள் கொடுத்து ஜெயித்தாரா உதயநிதி..? தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு..
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தம்மை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனை எதிர்த்து அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரின் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில், குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், தொகுதியின் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.