
இந்தியா முழுவதும், தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. நாளுக்கு நாள் பல பெண்கள் குடும்ப வன்முறையால் பலியாகின்றனர். சமீபத்தில் ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமையால், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் மீண்டும் ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கணவர் குடும்பத்தாரை கைது செய்யாமல் உடலை பெற மாட்டோம் என உறவினர்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி என்பவரை ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
திருமணத்தின் போது 120 பவுன் நகை, 25 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிவற்றை கொடுத்த நிலையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனை வகையில் 50 லட்சம் பணம் வருவதை அறிந்து அதனை கேட்டு கொடுமை படுத்திய நிலையில் 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி நேற்று மாலை தாயார் வெளியே சென்ற போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட நல்லூர் போலீசார் உடற்கூறாய்வு சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள், பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரேதத்தை பெற்றுக் கொள்வோம் என திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனாகத்தில் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.