களைகட்டியது ஆயுத பூஜை விழா...2 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு கொண்டாட்டம்...!

களைகட்டியது ஆயுத பூஜை விழா...2 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு கொண்டாட்டம்...!
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடி வரும் மக்கள், வாகனங்களை அலங்கரித்து வீடுகள் மற்றும் கோவில்களில்  வழிபாடு நடத்தி வருகின்றனர்.

களைகட்டிய ஆயுதபூஜை கொண்டாட்டங்கள்:

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கொரோனா ஊரடங்கு பரவலால் கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில்  இந்த கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில் நடப்பாண்டு பல பகுதிகளில் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. 

சென்னையில், இப்பண்டிகையை ஒட்டி இன்று பிரபல வழிபாடு தலங்களுக்கு சென்ற பக்தர்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள், கனரக வாகனங்களுக்கு பூஜை செய்தனர். 

குறிப்பாக பாரிமுனை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலுக்கு சென்ற மக்கள், மாவிலை தோரணங்கள் மற்றும் மலர் மாலை சூடி வாகனங்களை அலங்கரித்து, இனிப்பு - பழங்களுடன் 
பூசணி தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். இதனால் காலை முதல் வாகனங்களின் வருகையால் கோயில் வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது. 

இதேபோல் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளிலும் ஆட்டோக்களை சுத்தம் செய்த ஆட்டோ ஓட்டுனர்கள், வாகனங்களை அலங்கரித்து சிறப்பு படையலிட்டு வழிபாடு செய்துள்ளனர். 

மேலும் ஆயுத பூஜையொட்டி ஏராளமானோர் புதிய வாகனங்கள் வாங்குவார்கள் என்பதால் சென்னையில் உள்ள பிரபலமான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன மையங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன. சிலர் புதிதாக வாகனங்களை வாங்க முன்பதிவு செய்து வருகின்றனர். 
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com