
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 20 -தேதி நடைபெற்ற மதிமுக உயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது. கட்சி பணியே செய்யாத ஒருவருக்கு கட்சி பதவி கொடுத்தது மதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் பலர் விலகினர். அத்துடன், மதிமுக தொடங்கியது முதல் உடன் இருக்கும் மல்லை சத்யா புறக்கணிக்கப்பட்டு வைகோவின் மகன் என்ற காரணத்திற்காக பதவி வழங்கபட்டதாக பல பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருந்தன.
அதன் நீட்சியாக வைகோ - துரை வைகோ பிரச்சினை உருவெடுத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. “அப்போது துரை வைகோ கட்சியை விட்டே விலக உள்ளதாக’ அறிக்கை வெளியிட்டார். இந்த பிரச்னையில்தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வைகோ, ” மல்லை சத்யாவை உடன் பிறவாத தம்பியாகத் தான் நினைத்தேன். என்னைப் பற்றி மிக மோசமாக, பேசக்கூடிய நபர்களுடன் தொடர்பில் இருக்கிறார். பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார். கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம், யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மல்லை சத்யாவின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறமுடியாது. அது உண்மையும் இல்லை” என்று பேசியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து வைகோ குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய மல்லை சத்யா, “வைகோ சொன்ன வர்த்தையைத் தாங்கி கொள்ள முடியாத மனவேதனையில் இருக்கிறேன். துரோகம் செய்தேன் என்று கூறியதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுத்திருக்கலாம், குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்காக கொள்கையையே மாற்றிக்கொண்டு விட்டார். கட்சித் தலைமையை மகனுக்கு வழங்குவதற்குத் தயாராகி விட்டார், என பேசியிருக்கிறார்.
பின்னணி
மதிமுக -க்கு என்று அறக்கட்டளை சார்பில் ஒரு 5000 கோடி ருபாய் சொத்து இருக்கிறது. அந்த சொத்து தனக்கு பின்னால் தன் வாரிசுகளுக்குத்தான் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் வைகோ இவ்வாறு செய்கிறார். இது ஒரு வெளிப்படையான வாரிசு அரசியல். அவர் எதை எதிர்த்து கட்சி துவங்கினாரோ இன்று அதையே தான் அவரும் செய்கிறார். மேலும் திமுக தளியிடம் சென்று எந்த காரணத்தைக்கொண்டும் மல்லை சத்யாவை திமுக -வில் சேர்க்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டு வந்துள்ளார் என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மக்கள் மன்றத்தில் நீதிகேட்டு ஆகஸ்ட் -2 ஆன இன்று உண்ணா நிலை அறப்போராட்டத்தை மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் சென்னை தீவுத்திடல் அருகே சிவானந்தா சாலையில் நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறக்கூடிய இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா,
தனது மகன் வருகைக்கு முன்பாக 28 ஆண்டுகாலம் ஜனநாயகவாதியாக இருந்தார் வைகோ... மகன் வருகைக்குப் பின்னால் மறுமலர்ச்சி விலகி மகன் திமுகவாக மாறி இருக்கிறது மதிமுக.
அடிமட்டத்திலிருந்து வந்தவர்களுக்கு மரியாதை இல்லாமல் அலட்சியப்படுத்துவதும் அவமானப்படுத்துவதும் அலை கழிப்பதுமாக இருந்த காரணத்தினால் கடந்த ஒன்பதாம் தேதி சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சொன்ன காரணத்தினால் மக்களிடம் நீதி கேட்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளேன் .
மதிமுகவில் நான் இன்றைக்கும் துணை பொதுச்செயலாளராக தான் நீடித்துக் கொண்டிருக்கின்றேன். அவரும் நீக்கவில்லை நானும் விலகவில்லை என்றார்.
மதிமுக அலுவலகத்தில் வைகோ முன்னிலையில் நடந்த இணைப்பு குறித்த கேள்விக்கு, “துரை வைகோ கையை கொடுத்ததே ஒரு அநாகரிகமான முறையில் புறங்கையை தான் கொடுத்தார்" என்று தெரிவித்த அவர் கைகளும் இணையவில்லை இதயங்களும் இணையவில்லை என்று தெரிவித்தார். வைகோவின் மனம் கலங்கக்கூடாது என்பதனால் ஒரு பண்பாடு இல்லாத ஒரு நபருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருந்தது என்றும் தெரிவித்தார். என் பெயரில் நான் மன்னிப்பு கேட்டதாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. காலில் விழ கூடாது கட் அவுட் அடிக்கக்கூடாது என துவங்கப்பட்ட இயக்கத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு நான் காரணம் அல்ல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அவரது மகன் துரை வைகோவும் தான் காரணம்.
மரண தண்டனை கைதிகளுக்கு கூட கடைசி ஆசை என்பது இருக்கிறது . ஆனால் குறைந்தபட்ச விளக்கம் கூட கேட்காமல் மாவட்டச் செயலாளர்கள நிர்வாகிகளை நீக்குகிறார் துரை வைகோ. உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.