சி.பி.எம் பேரணி; 7 நாட்களில் முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சி.பி.எம் பேரணி; 7 நாட்களில் முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவு!
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்து பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையை அணுகும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அதன் மீது 7 நாட்களில் முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60வது ஆண்டை முன்னிட்டு, மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்தும்,   மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கை கண்டித்தும் தமிழகம் முழுவதும்  அக்டோபர் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிரச்சார பயணங்கள், பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக டிஜிபி-க்கு அக்டோபர் 10ம் தேதி மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, டிஜிபி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படாது என அரசு வழக்கறிஞர் கூறினார். 

இது போன்ற நிகழ்வுகளுக்கு உள்ளூர் காவல் நிலையம் அல்லது காவல் ஆணையரிடம் தான் மனு அளிக்க வேண்டுமெனவும் உள்ளூர் சூழலை பொறுத்து அவர்கள் முடிவெடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டால் உள்ளூர் சூழலை பொறுத்து முடிவு செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.  இதனையடுத்து, உள்ளூர் காவல்துறையிடம் மனு அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு அளிக்கப்படும் மனுவை பரிசீலித்து ஏழு நாட்களில் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

ஒருவேளை அனுமதி கேட்கும் தேதியில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருந்தால் மாற்று தேதியில் வழங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com