
உலக நாடுகளில் இந்தியாவை முதன்மை நாடாக்கிட சபதம் எடுப்போம் என, இந்திய அரசமைப்பு சட்ட நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்ட நாளான இன்று மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
1949-ம் ஆண்டு இதே நாளில் நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் நம் உரிமைகளையும், கடமைகளையும் உள்ளடக்கியிருப்பதோடு மட்டுமின்றி, நம் ஜனநாயகத்தின் அனைத்துக் கட்டமைப்புகளையும் கட்டிக் காத்து வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
எத்தனையோ அரசமைப்பு சட்டங்கள் உலகளவில் இருந்தாலும், எழுத்துப்பூர்வமான நம் சட்டம் உலகப் புகழ் பெற்றது என்றும், அப்படியொரு அரசமைப்பு சட்டத்தை தந்த டாக்டர் அம்பேத்கருக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்றளவும் இந்தியாவை கட்டி ஆளும் இந்த அரசமைப்பு சட்டம்தான், மாநிலத்தில் அன்னை தமிழுக்கு ஆட்சி மொழி உரிமையை அளித்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள அவர், நம் அரசியல் சட்டம் கண்ட இந்தியாவை உலக நாடுகளில் முதன்மை நாடாக்கிட சபதம் எடுப்போம் என சூளுரைத்துள்ளார்.