

சட்டமன்ற இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் கடந்த தேர்தலில் 69,284 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றிருந்தார். அவர் கடந்த மே 25 அன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
அதே நாளில் தாராபுரம் தொகுதியில் 81,100 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்த அதிமுக வேட்பாளர் சத்யபாமாவும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்தார்.
இதனால், இந்த இரு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமாவுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது ஏற்கெனவே அங்கு போட்டியிட்ட தவெகவினரே நிறுத்தப்படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், வேட்பாளர்களை அறிவித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக, தவெக, திமுக வேட்பாளர்கள் முறையே 69,284, 62,090, 59,838 வாக்குகளைப் பெற்றிருந்தனர். இதனால், இங்கு இந்த முறையும் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாராபுரத்தில் அதிமுக, தவெக, திமுக வேட்பாளர்கள் முறையே 81,100, 46,438, 64,373 வாக்குகளைப் பெற்றிருந்தனர். இதனால், அதிமுகவுக்கு ஆதரவான நிலை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் கடந்த முறை அமுலு பொன்மலர் திமுக வேட்பாளராகக் களமிறங்கினார். இந்த முறை பரந்தாமன் போட்டியிடுகிறார்.
தாராபுரத்தில் இந்திராணிக்குப் பதிலாக வழக்கறிஞர் எஸ். சுகன்யா போட்டியிடுகிறார். இந்த வேட்பாளர் மாற்றம் திமுகவுக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்