தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மீதும் அதன் தலைவரான விஜய் மீதும் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார் வைஷ்ணவி. விஜய் தவெக கட்சியை தொடங்கியதும் தன்னை கட்சியில் இணைத்து கொண்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தவர். தமிழக வெற்றி கழகத்தின் விர்ச்சுவல் வாரியர்களில் ஒருவராக இருந்தவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.
இவர் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகியதற்கு பெண் என்ற காரணத்தினால் கட்சி நிர்வாகிகள் தன்னை புறக்கணிப்பதாகவும், கட்சியில் உள்ள நிர்வாகிகள் தன்னை வளரவிடாமல் தடுப்பதாகவும் சில காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தன்னை தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் அவதூறாக பேசியதாகவும், தனது புகைப்படங்களை மார்பிங் செய்து பரப்புவதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். எனவே தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மீதும் இதை கண்டித்து அறிக்கை வெளியிடாத விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த வைஷ்ணவி அரசியலில் விமர்சனங்கள் நாகரிகமாக இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை என்றால் அவர்களை அவதூறாக பேசி அவமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்கள் தன்னை போன்று இளம் வயதில் அரசிலுக்கு வரும் பெண்களை அவமதிக்கும் விதமாக உள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.