
நீதிமன்ற உத்தரவை மீறி, ஆவணங்கள் தொடர்பாக பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறையின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் முறையீடு செய்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறி, இப்படி ஒரு சம்மன் எப்படி அனுப்பப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், வேண்டுமென்றே உத்தரவு மீறப்படவில்லை. தவறுதலாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது, இந்த வழக்கை எவ்வளவு முக்கியமானதாக அமலாக்கத் துறை கருதியது என தங்களுக்கு தெரியும் என குறிப்பிட்ட நீதிபதிகள், இது தவறுதலாக நடந்ததாக தெரியவில்லை என குறிப்பிட்டனர். இந்த வழக்கில் நீதிமன்றம், ஒரு ஆவணத்தை கேட்ட போது காலம் தாழ்த்திய அமலாக்கத் துறை, இப்போது ஏன் சம்மன் அனுப்பியது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என கண்டனம் நீதிபதிகள், விருப்பப்பட்டால் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.