

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தமபாளையம் வட்டமலை அணை பகுதியில் கால்நடைகளை மேய்க்கச்சென்றவர்கள் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர்.
பின்னர், அங்கு கருகிய நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டபோது அந்தப் பெண்ணின் கை, கால்களில் கல்லால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. மேலும் முகமும் கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிக்கப்பட்டு கருகிய நிலையில் இறந்தப் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை போலீசார் சேகரிக்க துவங்கியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்கள், கைரேகைகளை பதிவு செய்து சேகரித்து சென்றனர்.
இந்நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப் பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்ணை கல்லால் தாக்கி கொன்றதோடு உடலை எரித்தவர் யார் என்பது பற்றியும், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா? அல்லது நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
மேலும் குற்றச்சம்பவம் நடந்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்துள்ளது. அந்த பாட்டில்களின் பார்கோடுகள் வைத்து எங்கு விற்பனை செய்யப்பட்டது அதை யார் வாங்கினார்கள்? என விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. மேலும் சாலை ஓரங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த நிலையில்,
பழனி நெய்க்காரப்பட்டி அருகே அ.கலையம்புத்தூர் பகுதியை சேர்ந்த சங்கர்(60) என்பவர் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். இவர் காவல்துறையில் காவலராக கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் பணிபுரிந்து விட்டு விருப்ப ஓய்வினை அறிவித்துவிட்டு இருப்பதாகவும் தெரியவந்தது. பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளன.
“சங்கர் காவல்துறையில் சேர்ந்து 15 ஆண்டுகளே பணிபுரிந்துள்ளார். 1998 -ல் விருப்ப ஓய்வு கொடுத்து உள்ளார். இவருக்கு 4 மனைவிகள் 3 பெண் மற்றும் 3 ஆண் வாரிசுகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் பல்வேறு ஊர்களில் காதலிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதில் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த வடிவுக்கரசி என்பவரும் இருந்துள்ளார். மேலும் பல்வேறு பகுதிகளில் அரசு வேலை வாங்கித்தருவதாக சங்கர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில்தான் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி வடிவுக்கரசி உறவினர்களிடம் இருந்து லட்சகணக்கில் பணத்தை சங்கர் பெற்றுள்ளார்.
ஆனால் வேலை ஏதும் வாங்கித்தராமல் சங்கர் ஏமாற்றி வந்துள்ளார். “நாளடைவில் அரசு வேலை வாங்கி கொடு அல்லது எனது உறவினர்களுக்கு பணத்தை திருப்பி கொடு” என வடிவுக்கரசி வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் கூடிய விரைவில் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றால் போலீசில் புகார் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த சங்கர் இரண்டு நாட்களில் தருகிறேன் என்று கூறியுள்ளான். இதையடுத்து கடந்த 5ம் தேதி வெள்ளகோவில் அருகே உள்ள ஊரில் “எனக்கு பணம் தருகின்றனர் போய் வாங்க வேண்டும், நீயும் கூட வா சென்று வரலாம்” என அழைத்துள்ளார். இதை நம்பி வடிவுக்கரசி சங்கருடன் இருசக்கர வாகனத்தில்வந்துள்ளார்.. பின்னர் "பணம் தருபவர்கள் வர சிறிது நேரம் ஆகும் இங்குள்ள அணையை சுற்றி பார்க்கலாம்" என தெரிவித்துள்ளார். பின்னர் வட்டமலைகரை அணை ஓடையின் மேல் பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு காட்டு பகுதிக்கு மதியம் வந்த பின்னர் அங்கு இருவரும் மது அருந்தியதாகவும் கூரப்படுகிறது. பின்னர் அருகே கிடந்த கல்லை எடுத்து வடிவுக்கரசியை தலை,கை,கால்,ஆகிய பகுதிகளில் கண்முடித்தனமாக தங்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து பாதி உயிராக சரிந்து கிடந்த வடிவுக்கரசியின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு பெட்ரோல் ஊற்றி அவரை எரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகளில் வட்டமலை கரை அணைக்கு வரும் பொழுது இருவரும் இருசக்கர வாகனத்தில் வருவதும் திரும்பி செல்லும்போது சங்கர் மட்டும் செல்வதையும் கொலை நடந்த இடத்தில் கிடந்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகளையும் வைத்து ஆய்வு செய்து கொலையாளியை உறுதிப்படுத்திய தனிப்படை காவலர்கள் 2 நாட்களில் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை குற்றவாளி முன்னாள் காவலர் என்பது வெள்ளகோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.