
முன்னாள் அமைச்சர் வேலுமணி பதவிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான வழக்கில், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதி பெற தாமதமானது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முறைகேடு வழக்கு தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் இன்னும் கோப்புக்கு எடுக்கவில்லை எனவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுக்காதது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, எம்.பி.- எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
அதேபோல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற தாமதம் ஏற்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.