உள்ளாடைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கம்...! பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்...!

உள்ளாடைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கம்...! பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்...!
Published on
Updated on
1 min read

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். 

அப்போது துபாய் மற்றும் ரியாத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் 2 பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்தனர். 

அப்போது அதில் சிகரெட் பாக்கெட்டுகளும், லேப்டாப்களும் இருந்தன. ரூ. 52 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 57 கிராம் தங்கம், சிகரெட் பெட்டிகள், லேப்டாப்கள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். அதுப்போல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பயணிகளை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது 2 பேரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ. 79 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 710 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 32 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 767 கிராம் தங்கம், சிகரெட்டுகள், லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலின் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com