வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் தகவல்...! தமிழ்நாடு அரசு அறிவிப்பு...!

வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் தகவல்...! தமிழ்நாடு அரசு அறிவிப்பு...!
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் 67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதனடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 19 லட்சத்து 09 ஆயிரத்து 325 பேரும், அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 27 லட்சத்து 95 ஆயிரத்து 278 பேரும் பதிவு செய்து உள்ளனர். 31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 34 ஆயிரத்து 994 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 978 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 675 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 73 ஆயிரத்து 876 பேரும், பெண்கள் 38 ஆயிரத்து 239 உட்பட 1 லட்சத்து 12 ஆயிரத்து 115 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ஆயிரத்து 166 பேரும், பெண்கள் 5 ஆயிரத்து 520 பேர் உள்பட 17 ஆயிரத்து 686 பேரும் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 498 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 521 பேர் உட்பட 14 ஆயிரத்து 019 பேர் பதிவு செய்துள்ளனர். அதேப்போல், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 38 ஆயிரத்து 690 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 53 ஆயிரத்து 150 நபர்கள் என மொத்தம் 67,75,250 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com