

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமான ஒன்று என்பதை தமிழ் நாடு நன்கு அறிந்தது. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது.
இதற்கு இடையில் கடந்த செப் 15ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் என கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார்.
ஒரே காரில் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன்!!
முத்துராமலிங்கதேவரின் 118வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல முக்கிய தலைவர்கள் மதுரையில் கூடியிருந்தனர். இதில் தமிழிகக் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொடர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் செங்கோட்டையன், பாஜக -வின் நயினார் நாகேந்திரன், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பசும்பொன்னில் கூடி அங்குள்ள தேவர் சிலைக்கு மரியாதையை தெரிவித்தனர்.
தலைவர்கள் பொது வெளியில் கூடும்போது, அவர்களின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாக கவனிக்கப்படுகின்றன. இன்றைய தினம் தமிழக அரசியலில் அடுத்தடுத்த பேசுபொருளுக்கான குறியீடுகளை தலைவர்கள் விட்டுச்சென்றனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் நேற்று பயணம் செய்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த செயல் எடப்பாடியை கடுப்பேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று காலை மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் ஒரே காரில் பசும்பொன் கிராமத்துக்கு வந்தனர். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினர்.
செங்கோட்டையன் பதவி பறிப்பு!!
இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ -வான செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவி தற்போது நீக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்தான ஆலோசனை க சேலத்தில் நடத்தப்பட்டது, அதன் பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உருவாகிறது முக்குலத்தோர் கூட்டணி!?
ஒருவேளை டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி அமைத்தால், முக்குலத்தோர் வாக்குகளை நிச்சயம் பெறுவார்கள். இவர்களில் செங்கோட்டையனை தவிர மற்றவர்கள் அனைவரும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அது நிச்சயம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்குதான் பின்னடைவாக அமையும். மேலும், அதிமுக இப்படி சிதறிக்கிடப்பதை பாஜக தலைமை விரும்புவதாக தெரியவில்லை. என்னதான் NDA -வின் தமிழ்நாடு தலைமை எடப்பாடி எனக்கூறப்பட்டாலும்,அமித்ஷாதான் அதிகார மையமாக உள்ளார். எனவே பீகார் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக -வை ஒன்றிணைக்க அமித்ஷா முடிவெடுத்தால் அதை இபிஎஸ் -ஆல் தடுக்க முடியாது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.