
பள்ளி பருவத்திலேயே சாதிய வன்முறையில் ஈடுபடுவது வருத்தமளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை கர்நாடகாவிடம் இருந்து பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை என சாடிய எடப்பாடி பழனிசாமி, பெங்களூரு சென்றிருந்த போது, காவிரி நீர் குறித்து ஏன்? பேச வில்லை எனவும் வினவினார். தொடர்ந்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறிய திமுக, தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் சாதிய வன்முறையில் ஈடுபடுவது வருத்தமளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.