அரசு ஊழியர்களின் தலையெழுத்தை மாற்றப்போகும் அந்த கணக்கு: வெளியாகிய அதிரடி புள்ளிவிவரங்கள்! எவ்வளவு தெரியுமா?

இந்த புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் தற்போது சுமார் 8,22,471 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது...
அரசு ஊழியர்களின் தலையெழுத்தை மாற்றப்போகும் அந்த கணக்கு: வெளியாகிய அதிரடி புள்ளிவிவரங்கள்! எவ்வளவு தெரியுமா?
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது அது தொடர்பான நிதி மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்த மிக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள இந்த விவரங்கள், தமிழக அரசின் நிதிச் சுமை மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து விரிவான பார்வையை வழங்குகின்றன. இந்த புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் தற்போது சுமார் 8,22,471 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

இதில் குறிப்பாக, 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதிக்கு முன்பாக பணியில் சேர்ந்து, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1,98,331 என கணக்கிடப்பட்டுள்ளது. அதே சமயம், 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. சுமார் 6,24,140 பேர் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 8,22,471 என்ற நிலையை எட்டியுள்ளது.

நிதி ரீதியாகப் பார்க்கும்போது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள ஊழியர்களின் மொத்த நிதி, வட்டியுடன் சேர்த்து ₹84,507,27,00,000 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தத் திட்டத்தில் இருந்து 31/03/2025 வரை ஓய்வு பெற்ற சுமார் 45,625 பேர் தங்கள் ஓய்வூதியப் பயன்களைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 43,912 பேருக்கு ₹4,381.76 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதற்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, 2024-25 ஆம் நிதியாண்டில் மட்டும் 7,235 பேர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களுக்காக ₹1,308.31 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காகத் தமிழக அரசு செலவிடும் தொகையும் மிக அதிகமாக உள்ளது. ஒரு ஆண்டுக்கு அரசு ஊழியர்களுக்கான மொத்த சம்பளமாக மட்டும் சுமார் ₹70,754 கோடி வழங்கப்படுகிறது. அதாவது, சராசரியாக ஒரு மாதத்திற்கு ₹5,896 கோடி சம்பளமாகவே செலவிடப்படுகிறது. ஓய்வூதியதாரர்களைப் பொறுத்தவரை, ஒரு ஆண்டுக்கு சுமார் ₹41,290 கோடி ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தச் செலவினங்கள் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகின்றன. 2020-21 இல் ₹27,115.07 கோடியாக இருந்த இந்தச் செலவு, 2024-25 இல் ₹42,509.25 கோடியாக அதிகரித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவோரின் வயது குறித்த சுவாரஸ்யமான தகவல்களும் இதில் வெளியாகியுள்ளன. சுமார் 6,94,174 பேர் தற்போது ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களில் 80 முதல் 84 வயதைத் தாண்டியவர்கள் 70,235 பேர் உள்ளனர். 90 முதல் 94 வயது வரை இருப்பவர்கள் 8,288 பேர் உள்ளனர். 100 வயதை எட்டிய பிறகும் சுமார் 195 பேர் இன்னும் ஓய்வூதியம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான குடும்ப ஓய்வூதிய பலன்களுக்காகவும் அரசு ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாயை ஒதுக்கி வருகிறது. இந்த விரிவான புள்ளிவிவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் நிதி மேலாண்மை மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்கால ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அடிப்படையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com