

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றி முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்திருந்தார். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இதுநாள் வரை முதல்வரின் காலை உணவுத் திட்டம் என அழைக்கப்பட்டு வந்தது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றம் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகாலட்சுமி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 618 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு காலை உணவு திட்டம் குறித்த ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சமையல் கூடம், உணவு அருந்தும் இடம், சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், உணவுத் தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை செய்து, உரிய ஆதாரங்களுடன் இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சொந்த நிதியில் உபயோக பொருட்களுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த சுற்றறிக்கையால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இந்த சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தனது X தள பதிவில் தமிழக அரசை, “நிர்வாகத் திறனற்ற Take Diversion அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை” என்று கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் “முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Board-ஐ மாற்றச் செலவு செய்வதோடு மட்டுமல்லாமல், மாற்றியதற்கான ஆதாரமாகப் பெயர்ப் பலகையோடு நின்று புகைப்படமும் எடுத்து அனுப்ப வேண்டுமாம்.”
இதுபோல ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். அதை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் "காலை உணவுத் திட்ட விரிவாக்க ஏற்பாடுகள், அடிப்படைத் தேவைகளை தலைமை ஆசிரியர்களின் சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா?” என்று கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளர். மேலும் காலை உணவுத் திட்ட பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளுக்கான செலவை அரசே ஏற்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.