வாக்குப்பதிவில் 'மெகா' சாதனை! 82 சதவீதத்தைக் கடந்து புதிய வரலாறு.. மதுராந்தகம், செய்யாறில் 88% - தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் 80.63% வாக்குகள் பதிவாகி ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடியுள்ளன..
tamilnadu vote persantage
tamilnadu vote persantage
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்தியுள்ளது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம், மாலை வரை குறையாமல் நீடித்தது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தகவலின்படி, தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் சராசரியாக 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாகத் தமிழகத்தில் அதிகபட்சமாக 78% வாக்குப்பதிவே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்தச் சாதனை தகர்க்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான நிலவரங்களில் சேலம் மாவட்டம் 88 சதவீத வாக்குப்பதிவுடன் மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் 88.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தலைநகர் சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதி 87.12 சதவீதத்துடன் முன்னிலையில் இருக்க, மயிலாப்பூர் தொகுதி 72.79 சதவீதத்துடன் சற்று பின்தங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 82.41% பதிவாகியுள்ளது. இதில் மதுராந்தகம் (87.84%), செய்யூர் (85.67%) மற்றும் திருப்போரூர் (84.53%) தொகுதிகள் 80 சதவீதத்தைக் கடந்து அசுர வேகத்தில் உள்ளன. சோழிங்கநல்லூர் (78.13%) மற்றும் தாம்பரம் (81.92%) போன்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் மக்கள் ஆர்வம் குறையாமல் ஓட்டுப் போட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 78.07% வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு திருவையாறு (81.80%) மற்றும் ஒரத்தநாடு (81.13%) தொகுதிகள் 80 சதவீதத்தைக் கடந்து முன்னிலையில் உள்ளன. கும்பகோணம் (78.36%), பேராவூரணி (79.72%), பாபநாசம் (77.62%) மற்றும் திருவிடைமருதூர் (77.32%) தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் திருமங்கலம் தொகுதி 84.64 சதவீதத்துடனும், திருப்பரங்குன்றம் 79.01 சதவீதத்துடனும் உள்ளன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் 80.63% வாக்குகள் பதிவாகி ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடியுள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மதியம் 3 மணி நிலவரப்படி சுமார் 70% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அடுத்த இரண்டு மணி நேரங்களில் வாக்குப்பதிவு வேகம் அசுர கதியில் அதிகரித்தது. 5 மணி நிலவரப்படி பதிவாகியுள்ள இந்த 82.24% என்பது, இன்னும் வாக்குப்பதிவு முடிவடையாத சூழலில் வந்த தரவு என்பதால், ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் இதைவிடக் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவுக்கான அதிகாரப்பூர்வ நேரம் மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 6 மணிக்குப் பிறகு தேர்தல் அலுவலர்கள் அனைத்துத் தொகுதிகளிலிருந்தும் தரவுகளைச் சேகரித்துத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அதன் பிறகு தபால் வாக்குகள் (Postal Ballots) மற்றும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் முன்னதாகவே பதிவு செய்த வாக்குகளின் விவரங்கள் இதனுடன் சேர்க்கப்படும். இன்று இரவு 8 மணி அளவில் தான் மாநிலத்தின் ஒட்டுமொத்த மற்றும் இறுதி வாக்குப்பதிவு நிலவரம் (Final Voter Turnout) முழுமையாக வெளியாகும். இந்த இறுதி அறிக்கைக்காக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அதீத வாக்குப்பதிவு தமிழக அரசியலில் ஒரு மெகா மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது தற்போதைய நிலையையே உறுதிப்படுத்துமா என்பது வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும். 78% என்கிற பழைய ரெக்கார்டை தூக்கி எறிந்த தமிழக வாக்காளர்களின் இந்த எழுச்சி, இந்தியாவிலேயே அதிக வாக்குப்பதிவு கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. இரவு 8 மணிக்கு வெளியாகும் அந்த இறுதித் தகவலுக்காகத் தமிழகமே இப்போது மூச்சடைத்துப் போய்க் காத்துக் கொண்டிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com