
கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.
ஆனால் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயின் பரப்புரைக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என அனுமதி கேட்டிருந்த நிலையில் 27 ஆயிரம் பேர் வந்திருந்ததாக தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் குற்றஞ்சாட்டி இருந்தார்.
போலீஸ் அளித்த முதல் தகவல் அறிக்கையில், பரப்புரை நடந்த இடத்திற்கு விஜய் 5 நேரம் தாமதமாக வந்ததே காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த பரப்புரையில் மக்களுக்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனை அடிப்படையாக வைத்து விஜய் மீது வழக்கு பதிந்து விஜய் -யை கைது செய்யலாம். ஆனால் திமுக அரசு விஜயை கைது செய்ய தயக்கம் காட்டுவதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், மேலும் விஜய் மீது மக்களின் கோவம் முழுமையாக திரும்பவில்லை. சிலர் இது திமுக -வின் சதி என்கின்றனர். ஆனால் சிலர் இது விஜய் -ன் தவறுதான் என்கின்றனர்.
தவெக தலைமையின் ஆளுமை குறைபாடு!!
ஆனால் இந்த பெருந்துயருக்கு பின்னர் தவெக -வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவர் கூட களத்தில் நிற்கவில்லை. பொதுச்செயலாளர் ஆனந்த் தொடங்கி கொ.ப.செ ராஜ் மோகன் வரை போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓடி ஒளிந்துவிட்டனர். போதாக்குறைக்கு புஸ்ஸி ஆனந்தும், நிர்மல் குமாரும் முன் ஜாமீன் கோரி மனு கொடுத்திருந்தனர். ஆனால் அந்த மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து எந்த நேரமும் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் தான் விஜய் தேசிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனாலும் இந்த கரூர் Stampade தவெக என்ற கட்சியின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் உளவியல் ரீதியான சிக்கல்களை உண்டாக்கியுள்ளது.
மேலும், விஜய் மக்களை சந்திக்க வந்தாலே சிக்கல்தான் என்ற நிலை அரசுக்கும் வந்துள்ளது. ஆனால் விஜய் மீதும் மக்கள் முழு வெறுப்பையும் கொட்டி விடுவார்களா என்றால் அது கிடையாது. மக்களின் கோவம் முழுமையாக விஜயின் மீது திரும்பவில்லை. ஆனால் அந்த இடத்தை கூட விஜய் ஒழுங்காக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
விஜய் கைதாவாரா என்ற கேள்வியை முன்வைத்தால் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவேளை திமுக விஜயை கைது செய்தால் அது திமுக -விற்குத்தான் பாதகமாக அமையும் என்பது திமுக -விற்கு நன்றாக தெரியும். மேலும் மக்களுக்கு விஜய் -ன் மீது இருக்கும் ‘soft corner’ திமுக மீது கோவமாக கூட வாய்ப்புண்டு. தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருப்பதால் திமுக இந்த விஷயத்தில் பொறுமையாகத்தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
ஆனால் கைதானால் கூட அவருக்கோ இரண்டாம் கட்ட தலைவர்களுக்கோ பாதிப்பு குறைவாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், மக்களுக்காக சிறைக்கு சென்றுவிட்டு வந்திருக்கிறோம் என தவெக -வினர் மார்தட்டிக்கொள்ளக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது உண்மையில் விஜய் -க்கும் தவெக -விற்கும் மிகப்பெரும் சறுக்கல். இந்த கரூர் பிரச்சனை அவர்களின் தனித்தன்மையை பறித்துவிட்டது, மேலும் இத்தகு சட்ட சிக்கல் விஜய் -க்கு புதிது. எனவே அவர் நிச்சயம் கூட்டணிகளின் உதவியை நாடுவார் அதுவும் அவருக்கு சிக்கலாக மாறக்கூடும் என்கின்றனர் ஆர்வலர்கள்!!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.