"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் சிவகாசி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான ஈரோடு மேற்கு, தற்போது தமிழக அமைச்சரவையின் மூத்த அமைச்சரான முத்துசாமி அவர்களின் பிரதிநிதித்துவத்தின் கீழ் உள்ளது. இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ளதால் 'ஈரோடு' என்று பெயர் பெற்ற இந்த மண்ணில், வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலவப்போகும் அரசியல் மாற்றங்கள் குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மேற்கு தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 12 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 27 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 39 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 20 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாகக் கொங்கு வேளாள கவுண்டர்கள் 43 சதவீதம் பேர் மிக வலுவாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முதலியார் சமூகத்தினர் 12 சதவீதம் மற்றும் வன்னியர்கள் 10 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இது 79 சதவீதம் நகர்ப்புறங்களையும், 21 சதவீதம் கிராமப்புறங்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதியாகும்.
இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக மாநகராட்சி பகுதிகளில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் ஊரகப் பகுதிகளில் நடக்கவில்லை என்பது கிராமப்புற மக்களின் பெரும் குறையாக உள்ளது. திண்டல் போன்ற பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மாநகராட்சி வரி உயர்வு போன்றவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. சாலை வசதிகள் மோசமாக இருப்பதோடு, முறையான பாதாளச் சாக்கடைத் திட்டம் அனைத்து வார்டுகளிலும் முழுமையடையவில்லை. மேலும், ஊரகப் பகுதிகளிலும் மின் மயான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும், சட்டவிரோத மதுபான பார்களை மூட வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளாக உள்ளன.
ஈரோடு மேற்கு தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, திமுகவின் முத்துசாமி 49.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் ராமலிங்கம் 38.6 சதவீத வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் திமுக 184 பூத்களில் வலுவாகவும், அதிமுக 110 பூத்களில் வலுவாகவும் இருந்தன. சுமார் 72 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 53.8 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பெரும் முன்னிலை வகித்தது. அப்போது ஸ்விங் பூத்களின் எண்ணிக்கை 41 ஆகக் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 37 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 35 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 21 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது திமுக 145 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், அதிமுக 135 பூத்களில் வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்தத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமியின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் நிர்வாகத் திறன் திமுகவிற்குச் சாதகமாக இருந்தாலும், அதிமுக கூட்டணி கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஈரோடு மேற்கு கோட்டையில் உதயசூரியன் சின்னமே ஒரு படி முன்னிலையில் இருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.