
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு பகுதியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகனும், விழுப்புரம் முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அப்போது, பொன்முடி பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடாமல் காருக்குள் அமர்ந்து கொண்டே மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதனால், ஆத்திராமடைந்த பொதுமக்கள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது சேற்றை வாரி இறைத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தொடர்ந்து, அரசூர், இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள்,விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அயனாம்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் உணவு குடிநீர் வசதி செய்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட குழந்தைகளின் படிப்பு சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்தனர். இதுவரை சம்மபந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை வந்து பார்க்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அதேபோல் விழுப்புரம் - செஞ்சி சாலையில் அயனம்பாளையம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக மறியல் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் போலீசபருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவியயது. தொடர் பேச்சுவாரத்தைக்கு பிறகு மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.