
இந்நிலையில் சமீபத்தில் “ அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்.
இது பாமக -வில் பெரும் பதட்டத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே 16 கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
தொடர்ந்து 9 ஆம் தேதி அன்புமணி பொதுக்குழு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார், ஆனால் ராமதாஸ் தரப்பில் ஏற்கனவே 17 -ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என சொல்லப்பட்டிருந்தது, இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. “அவர் எப்படி பொதுக்குழு நடத்த முடியும். நான்தான் அவருக்கு அழைப்பே விடுக்க முடியும், பாமக சட்ட விதிகளின் படி அதற்கு இடமே இல்லை. அவர் பொதுக்குழு நடத்தினால் அது தேவையற்ற வன்முறைக்கு வழி வகுக்கும், எனவே நாங்கள் அதை சட்ட ரீதியாக அணுகுவோம் என ஏற்கனவே ராமதாஸ் பேசியிருந்தார்..
அதன்படி, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28 -ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30 -ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது, என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி கட்சியின் நலன் கருதி இரு தரப்பையும் நேரில் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார் . இந்த அழைப்பை ஏற்று அன்புமணி இன்று உயர் நீதிமன்ற நீதிபதியை நேரில் சந்தித்து தனது தரப்பு நியாயங்களை தெரிவித்ததாக கூறப்படுகின்றது . இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல் நிலை கருதி காணொளி வாயிலாக உயர் நீதிமன்ற நீதிபதியிடம் பேசுவதாக அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காணொளி வாயிலாக சுமார் பத்து நிமிடம் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷிடம் பேசினார். அப்போது தனது பல்வேறு கருத்துக்களை நீதிபதியிடம் பதிவு செய்த டாக்டர் ராமதாஸ் ,நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதாக நீதிபதியிடம் டாக்டர் ராமதாஸ் தெரிவித்ததாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் பத்திரிகையாளரிடம் தற்பொழுது தெரிவித்துள்ளார் .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.