தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே மாநிலம் முழுவதும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாகத் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 74 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய வாக்குச்சாவடியில் நடந்த சம்பவம் இப்போது தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையம் இந்த முறை பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்லக் கடுமையான தடை விதித்திருந்தது. வாக்காளர்கள் கொண்டு வரும் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குத் தனிப் பணியாளர்களை நியமித்து, டோக்கன் வழங்கும் வசதி செய்யப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமநாதபுரம் தினகர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் இந்த விதிமுறைகள் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தடையின்றி தங்களது செல்போன்களை வாக்குச்சாவடிக்கு உள்ளேயே எடுத்துச் சென்று பயன்படுத்தியது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மிகவும் 'சென்சிட்டிவ் பூத்' என்று சொல்லக்கூடிய பதற்றமான வாக்குச்சாவடியாக இந்தத் தினகர் பள்ளி வாக்குச்சாவடி அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அங்குத் தமிழக காவல்துறையினருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப் படையினரும் (CAPF) குவிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு பலத்த பாதுகாப்பு மற்றும் ராணுவத்தினர் கண்காணிப்பில் இருக்கும் ஒரு சென்சிட்டிவ் மையத்திலேயே, வாக்காளர்கள் தடையின்றி செல்போன்களுடன் உள்ளே சென்றுள்ளனர்.
இந்த விதிமுறை மீறல் குறித்துத் தகவல் அறிந்ததும் அங்கிருந்த தேர்தல் முகவர்கள் மற்றும் சில சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். சென்சிட்டிவ் பூத் என்று தெரிந்தும் இப்படி ஒரு அஜாக்கிரதையான சூழல் நிலவுவது தேர்தலின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் மத்திய படையினர் உஷார்படுத்தப்பட்டு, பின்னர் வந்த வாக்காளர்களிடம் இருந்து செல்போன்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்