நாட்டின் மதிப்புக்குரிய அமைப்புகள் ஒருதலைப்போக்காக செயல்படுகிறது - முதலமைச்சர் கண்டனம்

நாட்டின் மதிப்புக்குரிய அமைப்புகள் ஒருதலைப்போக்காக செயல்படுகிறது  - முதலமைச்சர் கண்டனம்
Published on
Updated on
1 min read

பிபிசி ஆவணப்படம்

பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டுள்ளதாகவும், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக பி.பி.சி திட்டமிட்டு ஆவணப்படத்தை தயாரித்து இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை செய்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.

எனவே பி.பி.சி - இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே இன்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி - இந்தியா அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தினர். அப்போது பி.பி.சி அலுவலகத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களின் தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லண்டனில் உள்ள பி.பி.சி அலுவலகத்திற்கு வருமான வரித்துறையின் ரெய்டு பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ரெய்டின் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை!

நாட்டின் மதிப்புக்குரிய அமைப்புகள் ஒருதலைப்போக்காகக் செயல்படுகிறது 

ஆனால், பா.ஜ.க. தலைமையிலான தற்போதைய ஒன்றிய அரசின்கீழ் நாட்டின் மதிப்புக்குரிய அமைப்புகள் ஒருதலைப்போக்காகக் செயல்படுவதோடு அவற்றின் சுதந்திரத்தன்மையையும் முற்றிலுமாக இழந்துவிட்டன.

அண்மைக்காலமாக, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக அரசியல் எதிரிகளைத் குறிவைத்துத் தாக்குவதற்கு அளவுகடந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கருவிகளின் பட்டியலில் BBC நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி "சர்வே"-யும் புதிதாக இணைந்துள்ளது.

மக்கள் அளித்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருவதற்குக் காரணமானவர்கள், நடப்பவை அனைத்தையும் மக்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும், எதிர்வரும் தேர்தல்களில் இதற்கான தக்க பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.


.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com