
பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவரவுள்ளதால் சிறை அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக, பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவை கடந்த 2022 அக்டோபர் 7ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்திருந்தனர்.
இதனை அடுத்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பு நலன் கருதி அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தில், பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கூறி திருநெல்வேலி கீழ்நிலை நீதிமன்றம் அந்த குண்டர் தடுப்பு சட்டத்தினை ரத்து செய்தது.
இதையடுத்து, 265 நாட்கள் சிறையில் இருந்த ராக்கெட் ராஜா, இன்று நீதிமன்ற உத்தரவின் படி விடுதலை செய்யப்பட உள்ள நிலையில், அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் சென்னை புழல் சிறை வளாகம் முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனை அடுத்து சட்டம் ஒழுங்கு நலனை கருத்தில் கொண்டு, புழல் சிறை வளாகம் முன்பு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் இருக்க அதிரடி போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து புழல் சிறை வளாகம் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்களை, தனி பேருந்து மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர் காவலர்கள்.
மேலும், அவரை வரவேற்க வரும் ஆதரவாளர்கள் அங்கங்கே சோதனை சாவடி அமைக்கப்பட்டு அங்கேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர்