

அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக்கொண்டு மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை கும்பல் மாஃபியா போல் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இதனை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவடையும் எனக்கூறப்பட்டுள்ளது.
மேலும், 2020ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு நவம்பர் வரை மொத்தம் 1439 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நீதிபதிகள் எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது?உள்ளிட்ட விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். ஐந்து கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக கனிம வளம் கொள்ளையடிக்கப்படும் நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது ? எனவும் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக்கொண்டு கனிம வளக்கொள்ளை கும்பல் மாஃபியா போல் செயல்படுவதாக கூறினர்.
மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையை தடுப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு என தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக புகாரளிக்காத வருவாய் துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவில் கூறியுள்ளனர்.
மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் அறிக்கை ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையை தடுக்க திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.