உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு : செந்தில் பாலாஜியின் அடுத்தகட்ட நடவடிக்கை...!

உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு : செந்தில் பாலாஜியின் அடுத்தகட்ட நடவடிக்கை...!
Published on
Updated on
1 min read

அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவனையில் ஜூன் 21-ம் தேதி இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

இதனிடையே, செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா,  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதையடுத்து,  3-வது நீதிபதி கார்த்திகேயன் வழக்கை விசாரித்து, செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான் என்றும், அவர் மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்ற காவல் சட்டப்பூர்வமானது என்றும் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து வருகிற 26-ந்தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, சென்னை காவேரி மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஆம்புலன்ஸ் மூலம் புழல் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறை ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com