
சிவகாசி அருகே நாரணாபுரத்தி லிருந்து அனுப்பன்குளம் செல்லும் சாலையில் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு சொந்தமான மாரியம்மன் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசு ரகங்களும் உற்பத்தி செய்யும் பணிகளில் சுமார் 200 ஆண்- பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசு தயாராகும் ஒரு அறையில் மூலப் பொருள்களின் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்த நிலையில், சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கார்த்திக்( வயது 24 ) லட்சுமி,சங்கீதா உள்பட 2 பெண் தொழிலாளர்களுடன் ஒரு ஆண் தொழிலாளியும் சேர்த்து 3 - பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். மற்றும் காயமடைந்த3-பெண் தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். வெடி விபத்து நடந்த பட்டாசு தொழிற்சாலைக்கு தீயணைப்பு வருவாய் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து நடந்த தொழிற்சாலை உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.