
மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2- ஆவது மாநில மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டுக்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 1.50 லட்சம் பேர் அமர்வதற்கான இருக்கைகள், 4 வாகன நிறுத்தும் இடங்கள், 200 அடி நீளத்துக்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்துக்கு ரேம்ப் வால்க் மேடை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முதல் மாநாட்டில் நடைபெற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மாநாடு துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே அரங்கம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 3.30 மணிக்கு மேல் விழா மேடைக்கு வந்த விஜய்
உள்ளே நுழைந்ததும், ‘உங்கள் விஜய்’ பாடல் ஒலித்தது. அந்த பாடலை விஜய் பாடியிருந்தார்.
தொடர்ந்து மேடையில் இருந்து இறங்கி மக்கள் மத்தியில் ராம்ப் வாக் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பின்னர், கொள்கை தலைவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
தவெக நிர்வாகிகளான, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என அனைவரும் பேசிய பிறகு விஜய் பேச ஆரம்பித்தார்..
“சிங்கம் ஒரு பெக்யுலர் ஆன விலங்கு.. வேட்டையாடத்தான் வரும். வேடிக்கை பார்க்கலாம் வராது. சிங்கத்துக்கு தனியாவும் இருக்க தெரியும், கூட்டமாவும் இருக்க தெரியும். தனியா வந்துதான் தண்ணி காட்டும். ‘A lion is always a lion’’ என அவர் பேசும்போதே தொண்டர்கள் ஆரவாரமிட்டனர்.
தொடர்ந்து பேசிய அவர், “ என் நெஞ்சில் ,குடியிருக்கும் அம்மாக்கள், அக்கா, தம்பி, அனைவரையும் நான் எப்படி மறப்பேன்? நீங்கதான் என் உயிராச்சே..உங்க எல்லாருக்கும் என் உயிர் வணக்கம். சினிமானாலும் சரி.. அரசியல்னாலும் சரி எம்.ஜி. ஆர் தான் நம்ம நியாபகத்துக்கு வருவாரு.. ஆனா அவரோட பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கல.. அவர மாறியே இருந்த கேப்டன் விஜயகாந்த் உடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைச்சுது... அவரை மறக்க முடியுமா.. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர்தானே.. மதுரை மக்களை போலவே நமது அரசியலும், உணர்வு பூர்வமான அரசியல் உண்மையான அரசியல்.
2 ஆவது மாநில மாநாடு ’வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற பேர்ல நடத்துறோம். அதுக்கு காரணம் இருக்கு. கடந்த காலங்களை போலவே இப்போதும் நடக்க போகுது. விக்ரவாண்டியில நடந்த முதல் மாநாடு தமிழக அரசியலின் தட்பவெப்பத்தையே மாத்துச்சு. சினிமா என்னும் கலை ஆயுதத்தின் வாயிலாக சமூக நீதிக்காக, சமத்துவத்திற்காக, மதச்சார்பின்மைக்காக ஒலிக்கும் குரலா இருக்கோம்"என விஜய் பேச பேச மக்கள் ஆரவாரத்தில் துள்ளி குதித்தனர்.
தொடர்ந்து பேசிய அவர், “என்கிட்ட நெறைய ஜோசியம் சொன்னாங்க.. அவரே வரல.. இவரே வரல… விஜய் மட்டும் எப்படி வருவாருனு ..என்னென்னவோ சொன்னாங்க.. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு இவரால மாநாடு லா நடத்த முடியாது அப்டினு சொன்னாங்க. இப்போ புதுசா வேற ஒன்னு சொல்றாங்க ஆட்சியெல்லாம் பிடிக்க முடியாதுனு, இவரு என்ன நேரா ஷூட்டிங் -ல இருந்து வந்து ஜெயிச்சிடுவாரான்னு கேக்குறாங்க. இப்போ என்னடானா கூட்டம் எல்லாம் ஓகே தான் அது எப்படி ஓட்டா மாறும்? -னு கேக்குறாங்க
ஆனால் உங்கள் ஆதரவுதான் எனக்கு கிடைக்கப்போற ஓட்டா.. மக்கள் விரோத சக்திக்கு எதிரான வேட்டா.. நம்மள கோட்டைக்கு கூட்டிட்டு போற ரூட்டா... மாறப்போகுது.
அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி இல்லங்க நம்ம கட்சி. கொள்கைக்காக துவங்கப்பட்ட கட்சி. கொள்கை கோட்பாடுகளோடு நமது கொள்கை தலைவர்களுடைய வழிகாட்டுதலோடு துவங்கப்பட்ட கட்சி.
நமது ஒரே கொள்கை எதிரி பாஜகதான். ஒரே அரசியல் எதிரி திமுக தான். அண்டர்கிரவுண்டில் ஆதாயத்திற்காக கூட்டணி வச்சிக்கிட்டு வேலைபார்க்கும் கட்சி தவெக இல்லை. இந்தியா முழுக்க இருக்க தாய் தமிழ் உறவுகள் எல்லாரும் என்னை விஜி, தளபதி, தளபதி விஜய் -னு சொந்தம் கொண்டாடும் போது பாசிச பாஜக கட்சியுடன் கள்ள கூட்டணி வைத்துக்கொள்ள நாம் என்ன உலகமகா ஊழல் கட்சியா.? நான் உங்ககிட்ட இன்னோரு விஷயம் சொல்ற.. நாம யாருங்கிறத சொல்ற.. நாம் யார் என்றால் இந்தியாவின் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட வெகுஜன மக்கள் படை.
மக்கள் படை நம்மோடு இருக்கும்போது அடிமை கூட்டணியோடு நாம் ஏன் சேர வேண்டும்.? நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு உண்டு. உடனே யாரோடு என்று எல்லாம் கேள்வி எழுப்பாதீர்கள். வருகிற 2026 -ல் 2 கட்சிகளுக்கு இடையேதான் போட்டியே ஒன்னு TVK இன்னொன்னு Dmk என்று பேசினார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே எம்.ஜி.ஆர் -ன் மிகவும் புகழ்பெற்ற பாடலான “‘எதிர்காலம் வரும் என் கடமை வரும்” என பாடிய விஜய் தொடர்ந்து பேசுகையில்
“பிரதமர் மோடி ஜி அவர்களே 3-ஆவது முறையும் ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை நீங்கள்தானே வைத்துளீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தது எல்லாருக்கும் நல்லது செய்யவா? இல்லை இஸ்லாமியர்களுக்கு எதிரா சதி செய்யவா? எங்கள் தமிழக மீனவர்கள் 800 -க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனர் . எங்கள் மீனவர்கள் பாதுகாப்புக்காக அந்த கச்சத்தீவை மீட்டு கொடுங்கள்.
அப்புறம் உங்கள் வரட்டு பிடிவாதத்தால் நீங்கள் கொண்டு வந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்யுங்கள். மக்களை ஏமாற்ற நேரடியாக பாசிச பாஜக அடிமை கூட்டணி ஒன்னு, உங்களின் மைனாரிட்டி ஆட்சியை ஓட்ட ஆர்.எஸ்.எஸ் குடும்பம் னு ஒன்னு வெச்சிக்கிட்டு இப்படி மக்கள் சக்தி இல்லாத அடிமை கட்சிகளை ஏமாத்தி 2029 வரை டூர் போகலாம் என்கிற எண்ணத்தில் இருக்காதீர்கள். தாமரை இலையில தண்ணியே ஒட்டலை தமிழகம் மட்டும் எப்படி ஒட்டும்”
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த எங்க கீழடி தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், எப்போதும் அழிக்க முடியாது, அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்” என கூறினார்.
தொடர்ந்து எம்.ஜி.ஆர் -ஐ பற்றி பேசிய விஜய், “எம்.ஜி.ஆர் என்றால் யாருனு தெரியும்ல.. அவர் மாஸ் என்னனு தெரியும்ல..அவர் ஆரம்பித்த அந்த கட்சி இப்போ எப்படி இருக்கு? அதன் நிலை என்ன?பல விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் தொண்டர்கள் தவிக்கின்றனர். வருகிற தேர்தலில் யாரை தேர்வு செய்யணும்னு அந்த அப்பாவி தொண்டர்களுக்கு தெரியும்.
தமிழ்நாட்டுல இப்படி பொருந்தா கூட்டணி இருப்பதால்தான் திமுக பாஜக உடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு அலைகிறது. ‘Stalin Uncle this is very wrong uncle’ , நீங்க நடத்துற ஆட்சியில பெண்கள், குழந்தைகள், பணியாளர்கள், சுற்றுச்சூழல் என யாருக்காவது எதற்காவது பாதுகாப்பு இருக்கா? சொல்லுங்க Uncle.. உங்க ஆட்சியை பார்த்து வாயே இல்லாத ஊரும் வயிறு வலிக்க சிரிக்கிறது. மக்களே நீங்கள் சொல்லுங்கள்..ஆட்சிக்கு வந்தால் செய்வோம் செய்வோம் என்று சொன்னார்களே செய்தார்களா!? சொல்லுங்கள்”
வேட்பாளர் பட்டியல்
இப்போ உங்களுக்கு சின்ன சர்ப்ரைஸ், நம்ம கட்சியோட வேட்பளர்கள் பேர அறிவிக்க போறோம். நம்ம மதுரை கிழக்கு வேட்பாளர் விஜய்.. மதுரை மேற்கு வேட்பாளர் விஜய்.. மதுரை மத்தி வேட்பாளர் விஜய்… மதுரை வடக்கு விஜய். ..மேலூர் விஜய் .. உசிலம்பட்டி விஜய்.. என்னடா எல்லா தொகுதிகளிலும் என் பேரே இருக்குனு பாக்குறீங்களா?? உங்கள் சின்னம் விஜய் தான்.
உங்கள் வீட்டிலிருந்துதான் ஒரு வேட்பாளர் வருவார். நீங்க என் முகத்துக்கு ஓட்டு போடீங்கன்னா அது எனக்கு போட்ட ஓட்டு மாதிரி..பேச்சுக்காக எல்லாம் இல்லை, நடைமுறையிலும் அப்படித்தா இருக்கும்.
நீங்க எல்லாம் என் ரத்த உறவு..என் கூட பொறந்த பொறப்பு.. நா ஒன்னும் மார்க்கெட் போன பிறகு ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியளுக்கு வரல .. படைக்கலத்தோடு அரசியலுக்கு வந்திருக்கேன். இவ்வளவு தயாரா அரசியலுக்கு வந்ததன் காரணம் ‘நன்றி கடன்’
‘என் கடன் இனி என் மக்களுக்கு பணி செய்து கிடப்பதே’ என்னை மனசார நேசிக்கும் மக்களுக்கு ஒண்ணே ஒன்னு சொல்ற ‘உங்க விஜய்.. உங்க கூட உண்மையா, உறுதியா, உணர்வு பூர்வமா சேவை செய்ய உங்க விஜய் நான் வரேன்..சொல்லல்ல முக்கியம் செயல்தான் முக்கியம்” என பேசியிருந்தார்.
குட்டிக்கதை
தொடர்ந்து ஒரு குட்டி கதையும் சொல்ல ஆரமித்தார். ‘ஒரு நாட்டில ஒரு ராஜா தனக்கு துணையா இருக்க ஒரு ஆள தேடுறாரு.10 பேரு தேர்வானாங்க.. ஆனால் ஒருத்தர் மட்டும் தான் தேர்ந்தெடுக்கலாம், அதனால அவங்களுக்கு ஒரு டெஸ்ட் வெச்சாரு. 10 பேருக்கும் 10விதை மணிகளை கொடுத்து வளர்த்துட்டு வர சொன்னாரு. 9 பேரும் அவரவர்களுக்கு ஏற்ப செடியை நன்றாக வளர்த்து வந்தாங்க. ஒருத்தன் மட்டும் ‘நான் என்னென்னவோ பண்ணி பார்த்தேன் விதை முளைக்கவே இல்லை’ னு சொன்னாரு. உண்மையிலேயே அந்த ராஜா கொடுத்தது வேகவைத்த விதை.. 9 பேரும் திருட்டு பயலுங்க..அந்த ஒரே ஒருவன் தான் உண்மையானவன். மக்கள் சக்தியாகிய நீங்கள்தான் அந்த ராஜா.உங்களுக்கான அந்த ஒருவன நீங்கதான் தேர்ந்தெடுக்கணும்.
அப்றம் ஒன்னு சொல்றாங்க..சினிமாக்காரன் சினிமாக்காரன்னு.... அம்பேத்கரை தோற்க்கடித்தது சினிமாக்காரன் இல்ல ஒரு அரசியல்வாதி…காமராஜரை தோற்கடித்தது சினிமாக்காரன் இல்ல அரசியல்வாதி..இன்றும் நம்மகூட வாழ்ந்து கொண்டு இருக்கும் தோழர் நல்லகண்ணு அய்யாவை தோற்கடிச்சது சினிமாகாரன் அல்ல அரசியல்வாதி. இப்படி நல்ல நல்ல தலைவர்களை எல்லாம் தோற்கடித்தது அரசியல்வாதி. அதனால, எல்லா அரசியவாதியும் அறிவாளியும் கிடையாது. எல்லா சினிமாக் காரனும் முட்டாளும் கிடையாது. தைரியமா இருங்க நல்லதே நடக்கும்” என பேசி முடித்தார்.
விஜய் தற்போது தனது இரண்டாவது மாநாட்டை முடித்துள்ளார். ஆனால் இன்னமும் அவர் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை. இந்த மாநாட்டில்தான் மக்களை நேரடியாக சென்று பார்க்க உள்ளேன் என பேசியிருக்கிறார். விஜய் -ன் பிரவேசத்தால் உண்மையிலேயே வரலாறு தன்னை மீண்டும் கொண்டு வருமா? வாகை சூடுமா தவெக? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.